ரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்

['அன்புள்ள தம்பிக்கு' உமர் எழுதிய முந்தைய கடிதங்களை படிக்க இங்கு சொடுக்கவும்]

அன்புள்ள தம்பிக்கு.

உன் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

உன் கடிதம் கண்டேன், அதில் நீ எழுதியவைகளை படித்தேன், ஆனால், இந்த கடிதத்தில் நீ எழுதியவைகளை படிக்கும் போது, இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி உனக்கு குழப்பம் இருப்பதாக உணர்ந்தேன்.

உன்னை குழப்பியவர்கள் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்கவுமில்லை உயிர்த்தெழவுமில்லை. யூனுஸ் நபியின் அடையாளம் இயேசுவின் சிலுவை மரணத்திற்கு ஒப்பிட முடியாது என்று  உன்னிடம் கூறியதாக தெரிகிறது. இந்த கடிதத்தில்  வாழ்விலும், மரணத்திலும் எப்போதும் நம்மை வெற்றி சிறக்கச் செய்யும் ஒரே வல்லமையாகிய இயேசுக் கிறிஸ்துவின் (ஈஸா அல்-மஸீஹ்) வல்லமையை, யோனா தீர்க்கதரிசியின் அடையாளம் மூலம் நான் உனக்கு விளங்கப்படுத்துகிறேன்.

1) விசுவாசியாத மக்களுக்காக ஒரே ஒரு அடையாளம்:

இயேசுக் கிறிஸ்து தாம் பூமியில் வாழ்ந்த காலத்தில் தம்மை விசுவாசிக்காத மக்களுக்கு, தம்முடைய ஆதிகாரத்தை நிரூபிக்க, ஒரே ஒரு அற்புத அடையாளம் மட்டுமே கொடுக்கப்படும் என்று அறிவித்தார். அது யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயாகும் (மத்தேயு 12:38-41 மற்றும் லூக் 11:29-30).

இஸ்லாத்தில் யூனுஸ் (துல் நூன் - Dhan-Nun) நபியை ப்பற்றிய இந்த சம்பவம்  குறிப்பிடப்பட்டுள்ளதை குர்ஆனில் நீ காணலாம். 

யோனா கடலில் வீசியெறியப்பட்டான், அங்கு அவன் ஒரு மிகப்பெரிய மீனால் விழுங்கப்பட்டு, இயல்பில் அவன் இறந்தான். ஆனால் மூன்று நாளைக்குப் பின் மீன் யோனாவை வெட்டாந்தரையில் வாந்திபண்ணிற்று; தேவன் அவனை திரும்பவும் உயிரோடு எழுப்பினார் என்பதை நீ மறந்திருக்க வாய்ப்பில்லை. 

இஸ்லாமியர் கூற்றுபடி, யோனா மீனின் வயிற்றில் மூன்று நாள் சுவாசமில்லாமலேயே அற்புதவிதமாக உயிரோடு காக்கப்பட்டான் என்று கூறுவது இந்த கதைக்கு எந்த பலனையும் கொடுக்கப்போவதில்லை. மேலும் இயேசு இந்த கதையை பயன்படுத்துவதிலிருந்து, அவர் யோனா இறந்ததை புரிந்துகொண்டிருந்தார் என்பது தெளிவாகிறதல்லவா?

யோனா தம் அனுபவத்தைக் குறித்து விவரிக்கும்போது, "நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன்" (யோனா 2:2); "ஆனாலும் என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர்" (யோனா 2:6) என்று கூறுகிறான்.

உன்னுடைய சில முஸ்லீம் நண்பர்கள் மூன்று பகல் மற்றும் மூன்று இரவு என்ற கருத்தின் அடிப்படையில் உன்னுடன் விவாதம் செய்திருப்பார்கள். இது, இயேசு வாக்களித்து நிறைவேற்றின உன்னத வாக்குத்தத்தமான மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல் என்ற மிக முக்கிய கருத்தை மறைப்பதற்கு மேற்கொள்ளப்படும் வாதமாகும். உனக்கு ஒரு உதாரணத்தின் மூலம் இதனை புரிய வைக்கிறேன். உனது நண்பன் உனக்கு  5 நிமிடத்தில் 10 லட்சம் ரூபாய் தருவதாக வாக்களித்து விட்டு, உன் கடிகாரத்தின்படி 10 நிமிடங்கள் சென்றபின்பே அவன் அந்த பணத்தை தருவதால், நீ அந்த பணத்தை வாங்க மறுப்பதை போலாகும். நீ சிந்தித்து பார்ப்பாய் என்று நம்புகிறேன். இந்த மூன்று நாள் இரவு பகல் என்பதைப் பற்றி விவரமாக விளக்கம் தேவையானால் எனக்கு தெரிவிக்க மறக்காதே.

2) கொடுக்கவும் மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் அதிகாரம்:

உனக்கு இன்னும் தெளிவாக புரிய, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைக் குறித்து இயேசுக் கிறிஸ்து கூறிய வேறு சில முன்கூற்றுகளையும் பார்போம். 

இயேசுக் கிறிஸ்து தம் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைக்குறித்து ஏற்கனவே பலமுறை கூறியுள்ளார். உதாரணமாக மாற்கு 8:31, 10:34. அவர் தீர்க்கதரிசனமாகவோ, வாக்குத்தத்தமாகவோ மட்டும் இதை கூறாமல், தம் சீஷர்கள் இந்த சம்பவத்தைக்குறித்து அறிந்திருக்கவும், அதை எதிர்பார்த்திருக்கவும் வேண்டுமென விரும்பினார்.

அவர் இதை, வெறுமனே, நடக்கப்போகும் ஒரு சம்பவமாக மாத்திரம் கூறாமல், தமக்குள்ள அதிகாரம் நிறைவேறுதலைக் குறித்தே பேசினார். "அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு" (யோவான் 10:17-18)

உனது இஸ்லாமிய நண்பர்கள் இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை உணரும் போது அவர்கள் உனக்கு இப்படி சொல்வார்கள். "ஈஸா மரித்தோரை எழுப்பினார் என்று குர்ஆன் சொல்கிறது. ஆக, அவருக்கு முன் பலர் உயிர்த்தெழுந்து உள்ளனரே! எனவே ஈஸாவின் உயிர்த்தெழுதலை மட்டும் எப்படி விசேஷமாக கருத முடியும்?"

இந்த கேள்விகளுக்கு பதில் மிகவும் சுலபமானது. இயேசு எப்படி லாசருவை மரித்தோரிலிருந்து எழுப்பினார், எப்படி நாயீன் ஊர் விதவையின் மகனை எழுப்பினார் என்றெல்லாம் வேதத்தில் சுவிசேஷ நூல்களில் விரிவாக நீ வாசித்திருக்கிறாய். லாசருவுக்கு, தாமாக மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும் வல்லமை இல்லை. அவருக்கு அதை முன்னறிவிக்கவும் இயலவில்லை. ஆனால் இயேசுவோ, தாம் மரித்தோரிலிருந்து எழுந்திருப்பதை முன்னறிவித்ததுமல்லாமல் அதை நிறைவேற்றிக் காண்பித்தார்.

இயேசு சிலுவையிலறையப்பட்டு, மரித்து கல்லறையில் அடக்கம்செய்யப் பட்டார். ஆனால் மூன்றாவது நாள் உயிரோடு எழுந்தார். அவர் உயிர்த்தெழுந்தபின்பு, பலமுறை தம்மைப் பின்பற்றியவர்களுக்கு காணப்பட்டார். உதாரணமாக, மகதலேனா மரியாள் மற்றும் சில பெண் சீடர்கள், பேதுரு, எம்மாவூருக்கு சென்ற இரு சீடர்கள், 11 அப்போஸ்தலர் கூடியிருந்த இடம், மேலும் 500 பேர் கூடியிருந்த கூட்டத்திலும் (1 கொரி. 15:3-7) அவர் தம்மை வெளிப்படுத்தினார். 40 நாட்களுக்குப் பின் அவர் பரத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தம் சீடர்களை வல்லமையால் ஆட்கொள்ளும் படி பரிசுத்தாவியின் வரத்தை பொழிந்தருளினார்.

3) இஸ்லாமியர்களின் குழப்பம்:

தம்பி, உன்னுடைய இஸ்லாமிய நண்பர்கள் இயேசு நேரடியாக கடவுளால் மரணமில்லாமல் வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்றும், அவர் திரும்பவும் வரும்வரை அங்கேயே இருப்பார் என்றும் உனக்கு போதிக்கின்றனர்.

இவர்கள் சொல்லும் இந்தக் கதை இயேசுவின் பரிகாரபலி (குர்பானி)யையும், மரணத்திலிருந்து வெற்றி பெற்றதையும் மாத்திரம் மறுக்க முயலவில்லை, மாறாக ஒரு மனிதன் சாதாரண மனித உடலோடு 2000 வருடமாக பரலோகத்தில் வாழ்வதாக ஒரு விநோதமான, தேவையற்ற அற்புதமாகிய ஒரு கருத்தையும் முன்வைக்கிறது. ஆனால் சிலர் இந்த விநோதத்தை தவிர்க்கும்பொருட்டு, இயேசு சிலுவையில் மரிக்கவுமில்லை, வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுமில்லை, மாறாக அவர் எல்லோரையும்போல எங்கோ ஒரு இடத்தில் ஒரு சாதாரண மரணமடைந்தார் என்கின்றனர். உதாரணமாக அகமதியா முஸ்லீம்கள், அவர் காஷ்மீரில் மரணமடைந்தார் என்கின்றனர். கிறிஸ்தவரோடு பல விவாதங்கள் செய்த அகமது தீதட் என்பவர் இந்த கருத்தை ஒருவகையாக  போதித்துவந்தார். குர்-ஆனும் இஸ்லாமியர்களும் அதிகமாக குழம்பியிருக்கிற ஒரு காரியம் உண்டு என்றுச் சொன்னால், அது இயேசுவின் சிலுவை மற்றும் உயிர்த்தெழுதல் பற்றியதாகும். ஒவ்வொரு இஸ்லாமிய அறிஞரும் ஒவ்வொரு விதமாக பதில் அளிப்பார். 

எனதன்பு தம்பியே, யோனாவின் அடையளத்தை இயேசுவின் மரணத்தோடு ஒப்பிட்டு பார்த்து ஓரளவிற்கு தெளிவடைந்திருப்பாய் என்று நம்புகிறேன்.

கடிதம் மிகவும் நீண்டதாக இருக்கக்கூடாது என்பதற்காக, நான் சுருக்கமாக எழுதுகிறேன். கண்டிப்பாக நீ ஒரு மெயில் அனுப்புவாய் என்று எதிர்பார்க்கிறேன். உன் சந்தேகங்களை எழுது. என்னால் முடிந்த மட்டும் உனக்கு தெளிவு படுத்த முயற்சிக்கிறேன். நாளை ஒரு கடிதத்தோடு உன்னை சந்திக்கிறேன். அதாவது  சிலுவையின் நேரத்தில் அல்லாஹ் செய்த காரியங்கள் எவ்வளவு பெரிய பாதிப்பை இஸ்லாமுக்கு உண்டாக்கியிருக்கிறது என்பதை அடுத்த கடிதத்தில் உனக்கு விவரிப்பேன்.

இப்படிக்கு, உன் சகோதரன்

தமிழ் கிறிஸ்தவன்.

மூலம்

உமரின் ரமளான் மாத தொடர் கட்டுரைகள்