உவமை 10: புத்தியுள்ள 5 கன்னிகைகளாக மாறி சொர்க்கத்திற்குள் நுழைய முஸ்லிம்களுக்கு விருப்பமா?

(ரமளான் 2022 தொடர் கட்டுரைகள்)

(முந்தைய வேதங்களின் உவமைகளும் இஸ்லாமும்)

ரமளான் 2022 ஆண்டின் முந்தைய கட்டுரைகளை கீழே படிக்கவும்:

  • உவமை 1: விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான் - யார் வழியருகே விதைக்கப்பட்டவர்கள்?
  • உவமை 2: காணாமல் போன ஆடுகளை அல்லாஹ் தேடுவானா? வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பானா?
  • உவமை 3: தீய குத்தகைக்காரர்களின் உவமையும், இஸ்லாமின் முன்னறிவிப்பும்
  • உவமை 4: தீய குத்தகைக்கார உவமையில் முரண்பாடும், பிழையும் உள்ளதா?
  • உவமை 5: முஸ்லிம்களே, உங்கள் கண்ணத்தில் ஒரு தகப்பனாக‌ அல்லாஹ் முத்தம் கொடுப்பானா? சொந்த வீட்டிலேயே அடிமைகளாக வாழும் பிள்ளைகளா நீங்கள்?
  • உவமை 6: இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு அளித்த தகப்பன் - இது தான் இஸ்லாமிய வழி
  • உவமை 7: அன்றைய பரிசேயர்களும் இன்றைய முஸ்லிம்களும் – சுயநீதி தம்பட்டத்தினால் இறைவனின் அன்பை பெறமுடியுமா?
  • உவமை 8: நீ இறைவனின் இலவச கிருபையை பெற விரும்புகிறாயா? அல்லது உன் அமல்கள் (கந்தைத் துணி, இத்தா துணி) மூலமாக இறைவனின் தரத்தை எட்டிவிடலாமென கனவு காண்கிறாயா?
  • உவமை 9:முஸ்லிம்களே நல்ல சமாரியன்கள்! என்ன விளையாடுகிறீரா? இது எப்படி சாத்தியம்?

இந்த தற்போதைய கட்டுரையில் இன்னொரு சுவாரசியமான உவமையைக் காண்போம். 

புத்தியுள்ள மற்றும் புத்தியற்ற கன்னிகைகள்

கீழ்கண்ட 13 வசனங்களில் ஒரு அருமையான நிகழ்ச்சியை இயேசு கூறி அதன் மூலமாக, ஒரு முக்கியமான எச்சரிக்கையை கொடுத்துள்ளார். இந்த உவமையில் ஒரு நற்செய்தியும் ஒரு தீய‌ செய்தியும் உள்ளது,  யாருக்கு நற்செய்தியுள்ளது, யாருக்கு தீயச்செய்தியுள்ளது என்பதை அறிய, வாருங்கள் இந்த உவமையை படிப்போம். மேலும் முஸ்லிம் நண்பர்களுக்கு இந்த உவமையிலிருந்து என்ன ஆலோசனை கிடைக்கிறது என்பதை பற்றி ஆய்வு செய்வோம்.

மத்தேயு 25:1-13

1. அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.

2. அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.  3. புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை. 4. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.

5. மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். 6. நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. 7. அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.

8. புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள். 9. புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். 10. அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.

11. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். 12. அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

13. மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.

1) புத்தியுள்ளவர்கள், புத்தியில்லாதவர்கள் என்றால் என்ன பொருள்:

மேலே படித்த உவமையில் "புத்தியுள்ளவர்கள், புத்தியில்லாதவர்கள்" என்று வாசிக்கும் போது, ஏதோ, அவர்கள் பிறந்ததிலிருந்தே புத்தியுள்ளவர்கள் என்றோ, அதே போன்று மற்றவர்கள் பிறந்ததிலிருந்தே புத்தியில்லாதவர்கள் என்றோ நாம் பொருள் கொள்ளக்கூடாது. இந்த உவமையில் கவனிக்கவேண்டிய விவரம் என்னவென்றால், ஒரு செயலைச் செய்யும் போது, அல்லது ஒரு காரியத்தில் அவர்கள் புத்தியில்லாதவர்களாக நடந்துக்கொண்டார்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். 

உலகின் பெரும்பான்மையான நாடுகளில், திருமண நிகழ்ச்சிகளை மிகவும் விமரிசையாக கொண்டாடுவார்கள். இன்றும் சில‌ செல்வந்தர்கள் தங்கள் "செழிப்பை" அதிக செலவுகள் செய்து தங்கள் வீட்டு திருமணங்களில் காட்டுவார்கள். இது அவரவர் விருப்பம். சில நாடுகளில் அந்த கொண்டாட்டங்கள் 7 நாட்களுக்குத் தொடரும். நம் இந்தியாவிலும், இப்படி பல நாட்கள் கொண்டாடியதாக நாம் கேள்விப்பட்டிருப்போம். நாட்கள் செல்லச்செல்ல, திருமண செலவுகளும் அதிகமாகிவிட்டதால், கூட்டுக்குடும்பங்கள் உடைந்துவிட்டதால்  நாட்கள் குறைந்து, இப்போது இரண்டு நாட்களில் திருமணத்தை முடித்துக்கொள்கிறார்கள். இன்னும் சில காதல் ஜோடிகள், மற்றும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட சில திருமணங்கள் கூட‌ ஒரே ஒரு மணி நேரத்தில் திருமண பதிவு அலுவலகத்திற்கு சென்று திருமணத்தை முடித்துக்கொள்கிறார்கள்.

முக்கியமாக, இயேசு வாழ்ந்த மத்தியகிழக்கு நாடுகளில், மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் திருமணம் நடக்குமாம்.  மாப்பிள்ளை அழைப்பு, மணப்பெண் அழைப்பு என்று பல நிகழ்ச்சிகள் நடக்கும். அதில் மாப்பிள்ளை அழைப்பு பற்றி தான் இந்த உவமையில் சொல்லப்பட்டுள்ளது. மாப்பிள்ளையை வரவேற்க ஒரு பெரிய கூட்டமே காத்திருக்கும், முக்கியமாக கன்னிப்பெண்கள், விளக்குகளை (தீவட்டிகளை) ஏந்திக்கொண்டு காத்திருப்பார்கள்.

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை தெரிந்துக்கொண்டு, புத்திசாலித்தனமாக, தீவட்டிகளுக்குத் தேவையான எண்ணையை எடுத்துக்கொண்டுச் செல்லாத பெண்களைத் தான் "புத்தியில்லாதவர்கள்" என்று இந்த உவமையில் கூறப்பட்டுள்ளது.

2) புத்தியுள்ள கன்னிகைகள் யார்?

இந்த உவமையில் இயேசு தம்மை மணவாளன் என்றும், தம்மை விசுவாசித்து, பரிசுத்தமாக தங்களைக் காத்துக்கொண்டு, ஆயத்தமாக (எண்ணையை வைத்துக்கொண்டு) அவரது வருகைக்கு காத்திருக்கின்ற திருச்சபையை "புத்தியுள்ள கன்னிகைகளுக்கு" ஒப்பிட்டு கூறியுள்ளார்.

அன்பு முஸ்லிம் நண்பர்களே! இறைவனின் சொர்க்கத்திற்குச் செல்லவேண்டுமென்று தானே நீங்கள் பல அமல்களைச் செய்கிறீர்கள்? தவறாமல் அனுதினமும் தொழுகிறீர்கள், ரமளான் நோன்பு நோற்கிறீர்கள்? இன்ன பல நல்ல செயல்களைச் செய்து மக்களுக்கு உதவி செய்கிறீர்கள்? இவைகள் எல்லாம் உங்களை சொர்க்கத்தின் வாசல் மூடப்படுவதற்கு முன்பு உள்ளே செல்ல உதவுமா? சிந்தித்துப் பாருங்கள். மனிதனால் எந்த காலத்திலும் 'பரிசுத்த இறைவன் விரும்பும் அளவிற்கு பரிசுத்தமாக பிழையில்லாத வாழ்க்கை வாழமுடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?'? 

3) சொர்க்கத்தின் கதவுகளை மூட இயேசுக்கு யார் அனுமதி கொடுத்தது?

முஸ்லிம்கள் பல முறை "இயேசு இறைவன் அல்ல, அவர் ஒரு நபி/தீர்க்கதரிசி மட்டுமே" என்றுச் சொல்வார்கள். இயேசு புதிய ஏற்பாட்டில் எங்கேயாவது "தம்மை கடவுள் என்றோ, தமக்கு தெய்வீகத்தன்மை உண்டு என்றோ" கூறியுள்ளாரா? என்று கேள்வி எழுப்புவார்கள்.

நீங்கள் ஒப்புக்கொண்டாலும் சரி, ஒப்புக்கொள்ள மனமில்லாமல் மறுத்தாலும் சரி, இந்த உவமையில் இயேசு தம்மை இறைவன் என்றுச் சொல்வதைக் காணலாம்.

பரலோக ராஜ்ஜியத்தின் அதாவது சொர்க்கத்தின் கதவுகளை ஒரு முறை அவர் மூடிவிட்டால், அதன் பிறகு ஆயத்தமில்லாதவர்கள் என்ன செய்தாலும் சரி, என்னச் சொல்லி முறையிட்டாலும் சரி "உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று சொல்லிவிடுவார்.

இந்த இடத்தில் "உங்களை அறியேன்" என்று இயேசு கூறியது, உண்மையாக அவர்களை அவர் அறியவில்லை என்று அர்த்தமல்ல, அவர்கள் யார் என்று அவருக்கு தெரியவில்லையென்று பொருள் அல்ல, அவர்களை அவர் "அங்கீகரிக்கமாட்டார், அனுமதி கொடுக்கமாட்டார்" என்று பொருளாகும். சர்வஞானியான இறைவனுக்கு அவர்கள் யார் என்று தெரியாமல் இருக்குமா?  

ஆயத்தமில்லாதவர்களுக்கு அவர் அனுமதி கொடுப்பதில்லை. கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டாலும், திருச்சபையின் அங்கத்தினர்களாக இருந்தாலும், அவர்கள் கையில் தீவட்டிகளை வைத்திருந்தாலும், அந்த தீவட்டி (பரிசுத்தமான வாழ்க்கை) மணவாளன் வர தாமதம் ஆகிவிட்டாலும், எண்ணையை வைத்துக்கொண்டு எப்போதும ஆயத்தமாக இருக்கும் மக்களுக்கு மட்டுமே சொர்க்கத்தின் உள்ளே நுழைவதற்கு அனுமதி.

இந்த உவமையின் சுருக்கம் மத்தேயு 25:13வது வசனத்தில் உள்ளது.

25:13 மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.

ஆயத்தமாக இருங்கள்  கடைசி நேரத்தில் கைவிடப்படும்படியாக வாழாதீர்கள். 

  • ஒரு நபி தம்முடைய வருகைக்காக காத்திருங்கள் என்று சொல்லமுடியுமா?
  • ஆயத்தமாக இல்லாதவர்களை நான் விட்டுவிடுவேன் என்று சொல்லமுடியுமா?
  • சொர்க்கத்திற்குள் அனுமதிக்க இவருக்கு யார் அனுமதி கொடுத்தது?

இதற்கு ஒரே பதில் தான் உள்ளது, அந்த மணவாளன் தான் இறைவன். பழைய ஏற்பாட்டிலும், தேவன் தம்மை "மணவாளன்" என்றும், இஸ்ரவேல் மக்கள் மணப்பெண் என்றும் கூறியுள்ளார்.

ஏசாயா 62:5. வாலிபன் கன்னிகையை விவாகம்பண்ணுவதுபோல, உன் மக்கள் உன்னை விவாகம்பண்ணுவார்கள்; மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.

புதிய ஏற்பாட்டில் இயேசு தம்மை மணவாளன் என்றும், திருச்சபை மணவாட்டி என்றும் கூறியுள்ளார்.

4) மனுஷகுமாரன் வரும் நாளை முஸ்லிம்களே நீங்கள் அறிவீர்களா?

மனுஷகுமாரன் என்ற வார்த்தையை பிடித்துக்கொண்டு முஸ்லிம்கள் "பாருங்கள், இயேசு தம்மை மனுஷகுமாரன்" என்றுச் சொல்கிறார், ஆகையால் அவர் இறைவன் அல்ல என்றுச் சொல்வார்கள். 

இந்த வார்த்தைப் பற்றி சுருக்கமாக இரண்டு விவரங்களை முஸ்லிம்கள் அறியவேண்டும். பழைய ஏற்பாட்டின் தானியேல் 7வது அத்தியாயத்தில் ஒரு மனுஷகுமாரனுக்கு ஒப்பானவர் பற்றி வருகிறது.

தானியேல் 7:13-14

13. இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்.

14. சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.

தானியேலின் இந்த தரிசனத்திற்கு பிறகு, யூதர்களுக்கு "மேசியா மனுஷகுமாரன் போல வருவார், அவரது ஆட்சி நித்திய ஆட்சி, தேவனுக்கு உள்ள இலக்கணங்கள் அவருக்கு சூட்டப்பட்டுள்ளது" என்று  நன்றாகத்தெரியும்.  

எனவே, இயேசு மனுஷகுமாரன் என்று ஒவ்வொரு முறை சொன்னபோதும், யூதர்களுக்கு உறுத்தியது, "இவன் தன்னை தேவனுக்கு சமமாக பேசுகின்றானே" என்றுச் சொல்லி அவரை கொலை செய்ய முயன்றார்கள். எனவே, முஸ்லிம்களே, இயேசு வாழ்ந்த முதல் நூற்றாண்டில், இஸ்ரேல் நாட்டில், யூதர்களுக்கு மத்தியில் "நான் ஒரு மனுஷன் என்றுச் சொன்னால், அவன் மனிதன் என்று பொருள், யாராவது "நான் மனுஷ குமாரன்" என்றுச் சொன்னால், அவன் தானியேல் 7வது அத்தியாயத்தில் வரும் தெய்வீக புருஷனை குறிப்பிடுகின்றான், தன்னை தேவன் என்றுச் சொல்கின்றான் என்று பொருள் என்பதை நீங்கள் அறியவேண்டும்.

இரண்டாவதாக, இயேசு மத்தேயு 24:13ல் சொன்ன எச்சரிக்கையின் படி, ஒரு மனிஷகுமாரன் வரும் நாளை உலக மக்கள் ஏன் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்ற கேள்வியைக் கேட்டுப்பார்த்தால், இயேசு தம்மை இறைவன் என்றும், தம்முடைய அடுத்த வருகையில் நீங்கள் கைவிடப்படாமல் இருப்பதற்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று அவர் கூறுகின்றார் என்று பொருள்.

5) முஸ்லிம்கள் எந்த பிரிவில் இருக்கிறார்கள்? புத்தியுள்ள 5 கன்னிகைகள் பிரிவிலா? அல்லது புத்தியில்லாத 5 கன்னிகைகள் பிரிவிலா?

இதுவரை நாம் உவமையை படித்தோம், அதன் விளக்கத்தையும் மேலோட்டமாக பார்த்தோம். இதன் படி பார்த்தால், முஸ்லிம்கள் எந்த பிரிவில் இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்?

கண்டுபிடித்துவிட்டீர்களா? உங்களில் சிலர் நினைப்பது போன்று, "ஆம், முஸ்லிம்கள் இந்த இரண்டு பிரிவினரிலும் இல்லை". இதைவிட மிகவும் தூரமான பிரிவில் இருக்கிறார்கள்.  மணவாளன் யார் என்று தெரியாத பிரிவில் "முஸ்லிம்கள் இருக்கிறார்கள்" என்று சொல்லலாம்.

புத்தியில்லாத கன்னிகைகள் குறைந்தபட்சம் மணவாளனின் வருகையை நம்பினார்கள்,அவரை எதிர்க்கொண்டுப் போக, தீவட்டிகளை எடுத்துக்கொண்டுச் சென்றார்கள், அவர் அதோ வருகிறார் என்று சொன்னவுடன் ஆயத்தப்பட முயன்றார்கள், தங்களிடம் எண்ணையில்லாதபடியினால், அதனை வாங்கச் சென்றார்கள், ஆனால், அவர்கள் திரும்பி வரும் போது, கதவு மூடப்பட்டுவிட்டது.

முஸ்லிம்களே, இந்த புத்தியில்லாத பிரிவிலும் இல்லை. அவர்கள் இயேசுவை நம்புவதில்லை, அவர் கொடுக்கும் இரட்சிப்பை பெற விரும்பவில்லை. ஆகையால், அந்த 10 கன்னிகள் கூட்டத்தின் எந்த பிரிவிலும் இல்லை. இந்த உவமையிலும் முஸ்லிம்கள் இல்லை என்று எண்ணும் போது எனக்கு கவலையாக உள்ளது!

சில முஸ்லிம்கள் "இயேசு மறுபடியும் வருவார் என்று இஸ்லாம் சொல்கிறது, அவர் வந்து பன்றிகளை கொள்வார், சிலுவையை முறிப்பார், யூதர்களோடு சண்டையிடுவார்" என்ற கதைகளை நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். 

ஆனால், இது சுத்தப்பொய்யாகும். இயேசு கூறிய உவமையின்படி, அவர் வரும் போது, நாம் ஆயத்தமாக இல்லாமல் இருந்தால், அவர் கைவிட்டுவிடுவார் என்று தெளிவாக கூறுகின்றார். வெளிப்படுத்தல் 22:15ம் வசனத்தின் கடைசி பகுதியை கீழே படிக்கவும்:"பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்". 

வெளி 22:11-16

11. அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.

12. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

13. நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.

14. ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

15. நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.

16. சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.

முஸ்லிம்களே! நீங்கள் "பொய்யை மெய்" என்று நம்பிக்கொண்டு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறீர்கள், புத்தியுள்ள கன்னிகைகள் போன்று, மணவாளனின் வருகை மீது விசுவாசம் வைத்து, ஆயத்தமாக இருங்கள், ஏமாற்றப்பட்டுவிடாதீர்கள் என்று இந்த ரமளான் மாதத்தில் அன்போடு எச்சரிக்கிறேன்.

இந்த பத்து கன்னிகள் பற்றிய உவமையை வீடியோவாக இங்கு பார்க்கலாம்:

  1. https://www.bible.com/videos/25414-matthew-25-1-13 
  2. https://www.youtube.com/watch?v=_ZHxI25j1EI  - பத்து கன்னிகைகள் | Ten Virgins | Tamil Christian All
  3. https://www.youtube.com/watch?v=EEw3GlFytro - The Parable Of The Ten Virgins
  4. https://www.youtube.com/watch?v=hngvHaVumJQ  - THE PARABLE OF THE 10 VIRGINS (Matthew 25:1-13)

இன்னொரு உவமையோடு சந்திப்போம்...

தேதி: 30th April 2022


ரமளான் 2022 கட்டுரைகள்

முந்தைய ரமளான் கட்டுரைகள்

உமரின் பக்கம்