பாகம் 3 - செண்பகப்பெருமாளின் பொய்களும் இயேசுவின் வெற்றியும்: மதம்சாராத ஆன்மீகம் - ஒரு மெகா ஃபிராடு!

(“யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்“ என்ற புத்தகத்துக்கு கொடுக்கப்பட்ட முந்தைய பதிலை [பாகம் 2] படிக்க இங்கு சொடுக்கவும்)

முன்னுரை:

கடந்த தொடரில், செண்பகப்பெருமாள் அவர்களின் புத்தகத்திற்கு “வாழ்த்துரை” எழுதிய செல்லதுரை அவர்களின் வரிகளை ஆராய்ந்தோம். வாழ்த்துரையை உண்மையாகவே 'ரெவரெண்டு செல்லதுரை" அவர்கள் தான் எழுதினாரா அல்லது திரு செண்பகபெருமாள் அவர்களே சுயமாக வாழ்த்துரையை எழுதிக்கொண்டு, ரெவரெண்டு செல்லதுரை அவர்களின் பெயரை பயன்படுத்திக்கொண்டாரா என்பது தான் சந்தேகம்.  குறைந்தபட்சம் புத்தக வெளியீட்டு விழாவில், புத்தகத்தின் ஒரு பிரதியை திரு செண்பகப்பெருமாள் அவர்கள் 'ரெவரெண்டு செல்லத்துரை' அவர்களிடம் கொடுத்து இருந்திருப்பார் என்று நாம் நம்பலாம். இவ்விருவரில் யாரிடமாவது நேரிலோ அல்லது தொலைபேசியிலோ பேசும் வாய்ப்பு கிடைத்தால், மேற்கண்ட கேள்வியை நிச்சயம் கேட்கவேண்டும். (வெளியீட்டு விழா என்றால் பிரமாண்டமாக செய்யவேண்டியதில்லை, நண்பர்கள் 4 பேர் ஒரு அறையில் சந்தித்து, டி காபி குடித்து, பிஸ்கட்டுகளை சாப்பிட்டு, புத்தகத்தை அறிமுகப்படுத்தினாலும், அது வெளியீட்டு விழா தான்).

இப்போது, நம் கதாநாயகன் “எஸ் செண்பகப்பெருமாள்” அவர்களின் பக்கம் நம் கவனத்தை மொத்தமாகச் செலுத்துவோம். அவர் எழுதிய முகவுரையின் முதலாவது பத்தியை பார்ப்போம்.  

யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும், பக்கம் 9 - முகவுரை:

வரிக்கு வரி அப்படியே மேற்கோள் காட்டாமல், அவர் எழுதியவைகளின் சுருக்கத்தை இங்கு தருகிறேன்.

1) அவர் எழுதிய புத்தகம், மதம் சார்ந்த முயற்சிக்கு உட்பட்டது இல்லையாம்.

2) மதம் என்பது கடவுள் பற்றி பேசும் ஒரு கொள்கையாம்

3) ஆன்மீகம் என்பது மதங்களிலிருந்து வேறுபட்டது, அது ஆன்மாவைப் பற்றியது. அதில் உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஆண், பெண், மனிதன் மற்றும் இதர ஜீவராசிகள் என்று வித்தியாசப்படுத்தும் கொள்கை இருக்காதாம்.

4) மேற்கண்ட பண்புகள், எந்த ஒரு மதத்திற்கும் இல்லையாம்.

5) மதவாதிகள் அனைவரும் தம் மதம் உயர்ந்தது, மற்றவை பொய்யானவை என்ற அகங்கார உணர்வு கொண்டவர்களாக இருப்பார்களாம்.

மூன்று வகையான மதவாதிகள்:

மேற்கண்ட ஐந்து பாயிண்டுகளை படிக்கும் போது, உடல் சிலிர்க்கிறமாதிரி இருக்கின்றதா உங்களுக்கு? அப்படியானால், நீங்கள் சரியாக குழம்பி இருக்கிறீர்கள் என்று அர்த்தம். மதங்களை பக்கத்தில் தள்ளிவிட்டு, நான் ஆன்மீகத்தை சொல்லித்தருகிறேன் என்று ஒருவர் சொன்னால், அவரை நம்புவதைக் காட்டிலும், காட்டில் நம் எதிரே நிற்கும் கரடியை நம்புவது நல்லது.

மதவாதிகள் மற்றும் ஆன்மீக வாதிகளை மூன்று  வகையாக பிரிக்கலாம்.

முதல் வகை:

“நான் இந்த மதத்தை பின்பற்றுகிறேன், உன் மதத்தை ஏற்கமாட்டேன்" என்று நம் முகத்துக்கு நேராக நின்று யாராவது சொன்னால்,  மேலும் சண்டைக்கு வந்தாலும் சரி, அவனை நாம் நம்பலாம். ஏனென்றால், அவன் தன் நிலைப்பாட்டை (நம்பிக்கையை மறைக்காமல்) சொல்லிவிட்டான், மேலும் நம் நெஞ்சில் வாள் பாய்ச்ச வந்தாலும், நம் வலிமையின் அடிப்படையில் அவனோடு நாம் போராடலாம் / ஜெயிக்கலாம் / தப்பிக்கலாம். ஒரு வேளை நம் நெஞ்சில் குத்திவிட்டாலுல், நம் உடல் மண்ணில் சாய்வதற்கு முன்பு நம்மை குத்தியவன் யார் என்ற உண்மையை அறிந்து  நாம் மடியலாம்.  இவன் முதல் வகை.

இரண்டாவது வகை:

இந்த வகை மனிதன், “அனைத்து மதங்களையும் ஒன்றாகவே பார்ப்பேன்” என்றுச்சொல்லி நம்மோடு தோளோடு தோள் சேர்த்து நடப்பான். ஆனால், உள்ளத்தில் ஒரு மதத்தையே சார்ந்து நிற்பான், வாய்ப்பு கிடைக்கும் போது, நம் முதுகில் குத்திவிடுவான்.

இவன் சிறிது ஆபத்தானவன். இவனோடு போராட நாம் தயாராக இல்லாத நிலையில் நம் முதுகில் கத்தியால் குத்திவிடுவான். இவனையும் ஒரு வகையில் நாம் பொறுத்துக்கொள்ளலாம், ஏனென்றால், அவனோடு உண்டு, படுத்து, பல ஆண்டுகளாக‌ நட்புக்கொண்டும், அவனை புரிந்துக் கொள்ளாதது நம் தவறு தான். ஆனால், நம்மை குத்தியது யார் என்று திரும்பி பார்த்து அவனை அடயாளம் காணலாம். ஒரு நம்பிக்கை துரோகியை இத்தனை நாட்கள் கூடவே வைத்துக்கொண்டோமே!  என்று துக்கப்படலாம். குறைந்தபட்சம் மண்ணில் சாய்வதற்கு முன்பாக, நம் எதிரி யார் என்று தெரிந்துக்கொண்டு மண்ணில் சாயலாம்.

மூன்றாவது வகை:

இந்த வகையைச் சார்ந்தவன், மேற்கண்ட இரண்டு வகையானவர்களைக் காட்டிலும் மிகவும் ஆபத்தானவன்.  மேற்கண்ட மக்கள், தங்கள் நிலைப்பாட்டைச் சொல்லி வாழ்வார்கள். ஆனால், இவனோ, “எனக்கு எந்த மதமும் வேண்டாம், மதங்களை கடந்தவன் நான், மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை காட்டும் மதம் நமக்கு வேண்டாம்” என்பான். இவன் ஒரு  புதிய ஆன்மீகக் கொள்கையை மக்களிடம் பரப்புவான்.

நம்முடைய மக்கள் மேற்கண்ட இரண்டு பேரை பின்பற்றுவதைக் காட்டிலும் இப்படிப்பட்ட ஆன்மீக வா(ந்)தியை அதிகமாக நம்பி ஏமாறுவார்கள். இவனை நம்புபவர்களுக்கு தங்கள் எதிரி யார் என்று மரிக்கும்வரைக்கும் தெரியாமல் போகும்.

இவன் நம்மோடு ஒரே பாயில்  படுப்பான், ஒரே இலையில் சாப்பிடுவான் (தட்டு இல்லை, இலை). நீங்களும் அவனும் ஒரே இலையில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது, சில நிமிடங்களில் விஷம் வைத்த உணவை சாப்பிட்டதால் உங்கள் கண்களுக்கு முன்பாக அவன் துடிதுடித்து சாவான்,  அவன் உங்கள் கண்களுக்கு முன்பாக மரிப்பதைப் பார்த்து நீங்கள் சுதாரித்துக்கொள்வதற்கு முன்பாகவே, நீங்களும் துடிதுடித்து சாவீர்கள். ஏனென்றால், ஒரே இலையில் இருவரும் பிசைந்து சாப்பிட்ட உணவாயிற்றே, விஷம் இருவரின் உயிரையும் குடிக்குமே!

யார் விஷம் வைத்தான் என்று உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் செத்துவிடுவீர்கள். இவன் மட்டும் ஐந்து நிமிடங்களுக்கு பிறகு தன் நடிப்பை முடித்துக்கொண்டு, எழுந்து நின்று உங்களைப் பார்த்து ஏளனமாக சிரித்துவிட்டு, அடுத்த நபரிடம் தன் 'மதம் சாராத ஆன்மா' கொள்கையை கொண்டுச் செல்வான்.

இப்படிப்பட்டவர் தான் 'திரு செண்பகப்பெருமாள்' அவர்கள்.  

  • மதம் உண்டு என்றுச் சொல்பவனை நம்பலாம். 
  • எல்லா மதமும் சமமானதே என்றுச் சொல்பவனையும் நம்பலாம். 
  • ஆனால், மதங்களைக் கடந்த 'ஆன்மீகத்தை'ச் சொல்கிறேன் என்றுச் சொல்பனை நம்பவே கூடாது.

உதாரணத்திற்குச் சொல்வதானால், சத்குரு ஜக்கி வாசுதேவ் என்ற ஆன்மீகவாதியின் பேச்சுக்களை கேட்டுப்பாருங்கள். நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் அல்ல என்றுச் சொல்லுவார். ஆனால் ஆன்மீகம் பேசுவார்.  இந்து தெய்வங்களே இல்லை என்பார், அல்லது அவர்களும் மனிதர்களே என்பார். தன் பேச்சுத்திறமையால் அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வார். அனைவரும் இவருடைய பேச்சில் மயங்குவார்கள்(இவர் சொல்லும் ஆன்மீகம் என்னவென்று புரியாமல் அமைதியாக இருப்பார்கள்). ஆனால், தன் ஆசிரமத்தில் பெரிய சாமியின் சிலையை வைத்துக்கொண்டு, இந்துக்களின் சடங்குகள் விரதங்கள், பூஜைகள் என்றுச் சொல்லக்கூடியவைகளைச் செய்வார். இருந்தபோதிலும் நான் ஒரு இந்து இல்லை என்பார். மதம் சாராத ஆன்மீகம் என்றுச் சொல்லி, ஒரு மதத்தை மறைமுகமாக யாருக்குமே தெரியாமல் பரப்பிக்கொண்டு இருப்பார். 

நான் இந்துத்துவத்தை பின்பற்றுகிறேன் என்றுச் சொல்லும் உத்திரபிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத்தைக் காட்டிலும், ஆபத்தானவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் என்ற ஆன்மீகவாதி. 

இதே போலத்தான், திரு செண்பகப்பெருமாளும், மதங்கள் சாராத ஆன்மீகம் என்று பேசிக்கொண்டு இருக்கிறார், இவர் ஆபத்தானவர்.

அடுத்ததாக, செண்பகப்பெருமாள் அவர்கள் கீழ்கண்ட குற்றச்சாட்டை முன்வைக்கிறார்:

“மதவாதிகள் அனைவரும் தம் மதம் உயர்ந்தது, மற்றவை பொய்யானவை என்ற அகங்கார உணர்வு கொண்டவர்களாக இருப்பார்க‌ள்.”

இப்படி இவர் சொன்னதிலிருந்து, இவரும் மதவாதிகளில் ஒருவராக ஆகிவிட்டார் அல்லவா? தான் குற்றப்படுத்தும் ஒன்றை, “தானே” செய்துவிட்டார் இல்லையா! மதவாதிகளுக்கு இருக்கும் அகங்காரம் இவருக்கும் உள்ளது என்று அர்த்தமாகின்றதல்லவா? ஏனென்றால், மற்றவர்களின் கொள்கைகள் உண்மையில்லை, நான் சொல்லும் மதம்சாராத ஆன்மீகம் தான் சிறந்தது என்று சொல்கிறாரே, இது மதவாதமே அல்லாமல் வேறு என்ன?

மதங்கள் அனைத்தும் போதிப்பது ஒரே கொள்கையைத் தானே! ஏன் மனிதன் தான் பின்பற்றுவது தான் உண்மையானது என்கின்றான்?

எல்லா மதங்களும் ஒன்றையே போதிக்கின்றன என்று சொல்வது தவறான கருத்தாகும். மேலோட்டமாகப் பார்த்தால் எல்லா மதங்களும் ஒன்று போலவே தென்படும், ஆனால் அடிப்படையில் ஒவ்வொரு மதமும் மற்ற மதங்களை புறக்கணிக்கின்றன என்பது தான் உண்மை.

மதங்களை பயன்படுத்தி, ஆன்மீக‌ வியாபாரம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் மனிதர்கள், “எல்லா மதங்களும் சொல்வது ஒன்றுதான், எம்மதமும் சம்மதம்” என்று சொல்லி மக்களை கவர்ந்து தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வார்கள். இப்படித்தான் பல ஆன்மீகவாதிகள் நம் இந்தியாவில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி சொல்கிறேன் என்று என் மீது கோபம் கொள்ள வேண்டாம். இது தான் உண்மை. என் மார்க்கம் தான் உண்மையானது, வேறு மார்க்கங்கள் பொய்யானவை என்று வெளிப்படையாகச் சொல்லும், இந்து ஆன்மீகவாதிகள் யாராவது இருக்கிறார்களா? கவனித்துப்பாருங்கள். அப்படி சொன்னால், அவர்களின் வியாபாரம் முன்னேறாது.

எல்லா மதங்களையும் மேலோட்டமாகப் பார்த்தால் “நன்மை செய்யுங்கள் தீயவை செய்யாதீர்கள்” என்ற பொதுவான கருத்தை சொல்கின்றன! எனவே எல்லா மதங்களும் இறைவனடி சேர்வதற்கு வழிகாட்டுகின்றன என்று இவர்கள் கூறுவார்கள். ஆறுகள் அனைத்தும் கடைசியாக கடலில் சென்று சேர்வது போல மதங்கள் அனைத்தும் கடைசியாக அந்த இறைவனிடம் சேர்க்க நமக்கு உதவி செய்கின்றன என்று இப்படிப்பட்ட மத வியாபாரிகள் அல்லது ஆன்மீக குருக்கள் சொல்லி, மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு அடிப்படைக் கோட்பாடு உண்டு அதனை அம்மதத்தின் புத்தகங்களில் காணலாம். அவைகளை மறைத்துவிட்டு, பணத்திற்காகவும் புகழுக்காகவும் ஆன்மீக குருக்கள்  பொய்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மனிதர்களை நாம் பார்க்கும் போது பொதுவாக எல்லோரும் ஒரே மாதிரியாக காணப்படுவார்கள் (இங்கு தோற்றத்தைச் சொல்லவில்லை), அதாவது மனிதர்கள் அனைவருக்கும் கண்கள், காதுகள் மூக்கு, கை, கால்கள் இருக்கின்றன. இதனால் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியாக சிந்திப்பார்கள் என்றும், ஒரே குணநலன்களை உடையவர்களாக இருப்பார்கள் என்றும் சொல்வது மடமையாகும். மேலோட்டமாகப் பார்க்கும்போது எல்லா மனிதர்களும் ஒன்று போல தென்பட்டாலும், ஒவ்வொருவரின் சிந்தனையும் செயல்பாடும் வெவ்வேறு விதமாக இருக்கும். அதுபோல மேலோட்டமாகப் பார்க்கும்போது எல்லா மதங்களும் “நன்மையை செய்யுங்கள், தீமையை செய்யாதிருங்கள், பக்தி உள்ளவர்களாக இருங்கள், தர்மம் செய்யுங்கள்” என்று சொல்வதை வைத்துக்கொண்டு, மதங்கள் அனைத்தும் இறைவனிடம் சேர்க்க நமக்கு உதவும் என்று சொல்வது சரியான கருத்து அல்ல.

பகவத் கீதை:

உதாரணத்திற்கு பகவத் கீதையை எடுத்துக்கொள்வோம். கீழ்க்கண்ட மூன்று ஸ்லோகங்களை (வசனங்களை) படித்துப்பாருங்கள்.

7.10 பிருதாவின் மகனே, எல்லா உயிரினங்களின் மூல விதையும், புத்திசாலிகளின் புத்தியும், பலசாலிகளின் பலமும் நானே என்பதை அறிவாயாக.

9.17 இந்த அகிலத்தின் தந்தையும் தாயும் காப்பவனும் பாட்டனாரும் நானே. அறியப்பட வேண்டிய பொருளும், தூய்மைப்படுத்தும் பொருளும், 'ஓம் என்னும் மந்திரமும் நானே. ரிக், ஸாம, யஜுர் வேதங்களும் நானே.

10.8 ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இதனை நன்றாக அறிந்த அறிஞர்கள், எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு, இதயப்பூர்வமாக என்னை வழிபடுகின்றனர்.

மேற்கண்ட வசனங்களில் உலகத்தின் மற்றும் உயிர்களின் மூலம் நான் தான் என்று கிருஷ்ணர் தெளிவாக கூறுகின்றார். (இல்லை, இந்த அர்த்தத்தில் கிருஷணர் அல்லது பகவத்கீதை ஆக்கியோன் சொல்லவில்லை என்று யாராவது சொன்னால், நம்பாதீர்கள். முதலாவது அவ்வார்த்தைகளை எழுதியவர் எந்த பொருளில் எழுதினார் என்பதை பாருங்கள், உங்கள் சொந்த கருத்தை இங்கு நுழைக்கமுயலாதீர்கள்).

இவ்வசனங்கள் “வேறு ஒரு இறைவன் இருப்பதையும், வேறு மதங்கள் இருப்பதையும் புறக்கணிக்கின்றன” அல்லவா? பகவத் கீதையை நம்பி, அதனைப் படித்து விசுவாசிக்கின்ற ஒரு ஆன்மீகவாதி “இதர மதங்களும் உண்டு, இதர தெய்வங்களும் உண்டு, இவைகள் அனைத்தும் இறைவனை அடையும் வழிகள்” என்று சொன்னால், அவன் பொய் சொல்கிறான் என்று அர்த்தம். அவன் பகவத்கீதைக்கு நம்பிக்கை துரோகம் செய்கின்றான் என்று அர்த்தம்.  எனவே, பகவத்கீதையை நம்புகிறவர்கள் மற்ற மதங்களை புறக்கணிக்கிறார்கள், இது அவர்களுடைய தவறு அல்ல, அவர்கள்  நம்புகின்ற புத்தகமும் அப்படி சொல்கின்றது அவ்வளவுதான். 

ஆக ஒரு இந்து தன் மார்க்கம் தான் உண்மையானது என்று "நம்புவதில்" தவறில்லை.

பகவத் கீதை என்பது உண்மையான வேதமா? கிருஷ்ணர் இறைவனா? உண்மையாகவே மகாபாரதம் நடந்த சரித்திரமா? போன்ற கேள்விகள் ஆராய்ச்சிக்கு உரியது, அது வேறு விஷயம், அந்த ஆராய்ச்சிப் பற்றி நான் இங்கு கூறவில்லை. மேற்கோள் காட்டிய வசனங்களை மட்டும் அடிப்படையாகக்கொண்டு எடைபோடாமல், முழு புத்தகத்தையும் ஆய்வு செய்து தான் முடிவு எடுக்கமுடியும். அந்த முடிவையும் அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம் தான்.  பகவத் கீதையை வேதம் என்று கருதினால், அது இப்படித்தான் சொல்கிறது  என்று நம்புகிறவன் தான் உண்மையான பக்தன். கீதை ஒன்றைச் சொல்ல, அதனை மாற்றி பக்தன் வேறுவகையாகச் சொன்னால், அதை ஏற்றுக்கொள்ளமுடியுமா?

பகவத்கீதை இப்படி சொல்லியிருக்கும் போது, பல ஆன்மீகவாதிகள் “எம்மதமும் சம்மதம்” என்று சொல்லி ஆசிரமங்கள் நடத்துகிறார்கள். இது அவர்களுக்கு வியாபாரம் அவ்வளவுதான். உண்மையில் அவர்கள் பகவத்கீதைக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று அர்த்தம்.

அடுத்ததாக குர்ஆனுக்கு செல்வோம்

குர்ஆன்:

குர்ஆனில் இருந்து இரண்டு வசனங்களைப் பார்ப்போம்:

47:19. (நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரிய வேறொரு இறைவன் இல்லை என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொண்டு, நீங்கள் உங்களுடைய தவறுகளை மன்னிக்கக் கோருவதுடன், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்க ளுக்கும் மன்னிப்பு கோருங்கள்! (நம்பிக்கையாளர்களே!) உங்களுடைய நடமாட்டத்தையும் நீங்கள் தங்கும் இடங்களையும் அல்லாஹ் நன்கறிவான் 

57:3. அவனே முதலானவன்; அவனே இறுதியானவன்; அவனே வெளிப்படையானவன்; அவனே மறைவானவன்; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன். (அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)

"அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, அவன் தான் ஆரம்பம், அவன் தான் முடிவு" என்பதுதான் இவ்வசனங்களின் பொருள். குர்ஆன் இப்படி சொல்லிவிட்ட பிறகும் குர்ஆனை நம்புகிற முஸ்லிம், எம்மதமும் சம்மதம் என்று சொன்னால், அவன் ஒரு ஏமாற்றுக்காரன் அவன் எதோ தன் வியாபாரத்திற்காக மக்களை ஏமாற்றுகிறான் என்று அர்த்தம். எனவே தான் முஸ்லிம்கள் இஸ்லாமை அங்கீகரித்து மற்ற மார்க்கங்களை புறக்கணிக்கிறார்க‌ள். இதில் அவர்களின் தவறு ஒன்றும் இல்லை.

குர்ஆன் உண்மையான இறைவேதமா? அல்லாஹ் உண்மையான இறைவனா? போன்ற கேள்விகள் எல்லாம் ஆராய்ச்சிக்கு உரியது. மேற்கோள் காட்டிய வசனங்களை மட்டும் அடிப்படையாகக்கொண்டு எடைபோடாமல், முழு புத்தகத்தையும் ஆய்வு செய்து தான் முடிவு எடுக்கமுடியும். அந்த முடிவையும் அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம் தான். அடிப்படையில் பார்க்கும்போது குர்ஆன் வேறு ஒரு மார்க்கத்தை அங்கீகரிப்பதில்லை, கீதையின் மேற்கண்ட வசனங்களும் வேறு மார்க்கத்தை அங்கீகரிக்காத வசனங்கள் தான். 

இப்பொழுது பைபிளுக்கு செல்லுவோம்.

பைபிள்: பைபிளில் இருந்து இரண்டு வசனங்களைப் பார்ப்போம்.

ஆதியாகமம் 1:1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

பைபிளின் முதல் புத்தகம் முதல் வசனம் மேற்கண்ட விதமாக தொடங்குகிறது. இந்த வசனத்தின்படி பைபிளில் சொல்லப்படுகிற தெய்வம், “வானத்தையும் பூமியையும் படைத்தார்” என்று அர்த்தமாகின்றதல்லவா? இந்த வசனம் வேறு தெய்வங்களை புறக்கணிக்கிறது.

பைபிளை நம்புகிற ஒரு கிறிஸ்தவன் அல்லது ஒரு போதகர், எல்லா மதமும் சம்மதம் என்றோ, எல்லா மதங்களும் இறைவனை அடையும் வழிகள் தான் என்று  சொல்வானானால், அவன் மிகப் பெரிய பொய்யன். அவன் பைபிளின் வசனங்களை நம்பவில்லை என்று அர்த்தம். 

இயேசு சொன்ன ஒரு வசனத்தை பார்ப்போம்:

யோவான்  14: 6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

இறைவனை அடைவதற்கு என்னைத் தவிர வேறு வழி இல்லை என்று இயேசு தெளிவாகச் சொல்கிறார். இதுவும் இதர மதங்களை புறக்கணிக்கின்ற வசனம் தான். “நானும் ஒரு வழி” என்று சொல்லவில்லை, “நானே வழி” என்றுச் சொல்கிறார். இதோடு நிற்காமல், “என்னைத்தவிர வேறு வழி இல்லை பிதாவை அடைவதற்கு” என்றுச் சொல்லி, இதர மார்க்கங்களின் கதவை அடைத்துவிட்டார் இயேசு.

இயேசுவின் இந்த வசனங்களையும் படித்து நம்புகின்ற ஒரு கிறிஸ்தவர், எல்லா மதங்களும் உண்மை தான், அவைகள் எல்லாம் இறைவனை அடையும் வழி தான், என்று சொன்னால், அவனை விட மிகப் பெரிய பொய்யன் யார் இருக்க முடியும்?

பைபிள் உண்மையான வேதமா? இயேசு இறைவனா? அவர் மட்டும்தான் வழியா? போன்ற கேள்விகள் எல்லாம் ஆய்வுக்கு உரியது. மேற்கோள் காட்டிய வசனங்களை மட்டும் அடிப்படையாகக்கொண்டு எடைபோடாமல், முழு புத்தகத்தையும் ஆய்வு செய்து தான் முடிவு எடுக்கமுடியும். அந்த முடிவையும் அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம் தான். ஆனால் பைபிளை பொருத்தமட்டில், அது வேறு மார்க்கத்திற்கு இடம் தரவில்லை.

பகவத் கீதை நம்புகின்ற ஒரு இந்துவோ, குர்ஆனை நம்புகின்ற ஒரு முஸ்லிமோ, பைபிளை நம்புகின்ற ஒரு கிறிஸ்தவனோ, தன் மார்க்கம் தான் உண்மையான மார்க்கம், மற்ற மதங்கள் பொய்யானவை என்று நம்புவதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால் அவனவன் வேதம் என்று கருதுகின்ற புத்தகங்கள் அப்படித்தான் சொல்கின்றன.

எல்லா மக்களையும் நேசியுங்கள்” என்று இயேசு கட்டளையிட்டுள்ளாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டால் “ஆம்” என்பது தான் பதில், ஆம் பைபிள் அப்படித்தான் சொல்கிறது. ஆனால் அதே பைபிள் “எல்லா மதங்களும் சமம், மதங்களுக்கு இடையில் வேறுபாடு காட்ட வேண்டாம்” என்று சொல்கிறதா என்று கேட்டால் “இல்லை” என்பதுதான் சரியான பதில். 

ஆகையால், மேலோட்டமாக மதங்களை பார்க்கும்போது அவைகள் ஒன்று போலத் தென்படும், ஆனால் அடிப்படையில் ஒவ்வொரு மதமும் மற்றொரு மதத்தை புறக்கணிக்கின்றது என்பதுதான் உண்மை. கிருஷ்ணர் அல்லாஹ்வையும், இயேசுவையும் புறக்கணிக்கிறார். அல்லாஹ் கிருஷ்ணரையும் இயேசுவையும் மறுக்கிறார். இயேசு அல்லாஹ்வையும் கிருஷ்ணரையும் புறக்கணிக்கிறார். இவர்களில் யார் உண்மையான தெய்வம் என்பதை அறிவது மனிதர்களின் கடமை.

வெளிநாடுகளில், ஒரு கத்தோலிக்க சபை, இந்துக்களை அழைத்துக்கொண்டு வந்து பகவத் கீதையை படிக்க அனுமதித்தார்கள் என்ற செய்தியை கேட்டு ஆச்சரியப்பட்டேன். முஸ்லிம்களை அழைத்துக் கொண்டு வந்து, குர்ஆனை படிக்கச் சொன்னார்கள் என்று கேள்விப்பட்டேன். இவைகளெல்லாம் ஏமாற்று வேலைகள், பைபிளின் படி, தேவனுக்கு எதிராக செய்யும் நம்பிக்கை துரோகங்கள். பகவத்கீதையில் நான் தான் கடவுள் என்று கிருஷ்ணர் சொல்கின்றார், அதனைக் கொண்டு வந்து திருச்சபையில் வாசித்தால், பைபிளில் 'நான் தான் கடவுள்' என்றுச் சொன்ன தேவனை கேலிசெய்வது  போல ஆகாதா? ஒரு அடிப்படை புத்தி நமக்கு வேண்டுமல்லவா?  மக்களோடு நல்லிணக்கம்வேண்டுமென்பது வேறு விஷயம். மதங்களோடு நல்லிணக்கம் தேவையில்லை. கிறிஸ்தவர்கள் இந்துக்களை நேசிக்கவேண்டும், முஸ்லிம்களை நேசிக்கவேண்டும், அவர்களுக்காக ஜெபிக்கவேண்டும், அவர்களுக்கு உதவி செய்யவேண்டும், மருத்துவம் செய்யவேண்டும், சமூகத்தில் நடக்கும் கேடுகளை எல்லோரும் கைகோர்த்து சேர்ந்து களைய  முயலவேண்டும். இப்படி மக்களிடையே நல்லிணக்கம் உண்டாக்கவேண்டுமே ஒழிய, அவர்களின் வேத நூல்களை கொண்டு வந்து நம் சபைகளில் தேவசமூகத்தில் வாசித்தால், அவர்களுக்கும் அது அவமானம், நமக்கும் அவமானம். ஒரு ஏழை இந்துவின் முஸ்லிமின் மருத்துவ செலவிற்காக, உன் திருச்சபையை விற்று கூட நீ செலவு செய்யலாம், அதனை இயேசு  மெச்சிக்கொள்வார், ஏனென்றால் நீ மனிதனுக்கு உதவி செய்தாய். ஆனால், மற்ற மதங்களின் வேதங்களை கொண்டு வந்து தேவ சமூகத்தில் வாசித்து, விசுவாசிகளை குழப்புவது மிகப்பெரிய தவறாகும்.

“மதவாதிகள் அகங்காரம் கொண்டவர்களாக, தன் மதம் தான் சரியானது மற்றவைகள் பொய்யானவைகள் என்று சொல்லுகிறார்கள்” என்று  திரு செண்பக‌ப்பெருமாள்  குற்றம் சாட்டுகிறார். இதில் மக்களின் தவறு ஒன்றும் இல்லை,  அவர்களின் வேதம் அப்படித்தானே சொல்லுகிறது. அது பகவத் கீதையாக இருக்கட்டும், குர்ஆனாக இருக்கட்டும், அல்லது பைபிளாக இருக்கட்டும் அந்தந்த புத்தகம் சொல்லுகிறபடி தானே செய்ய வேண்டும்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை கூற விரும்புகிறேன், தன் மதம் தான் உண்மையானது என நம்புகின்ற ஒரு கிறிஸ்தவர், ஒரு ஹிந்து, அல்லது ஒரு முஸ்லிம் மற்ற மதங்களை நம்புகிறவர்களை துன்பப்படுத்த கூடாது, கட்டாயப்படுத்தக்கூடாது. இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். இதை செய்யாத போது, மக்கள் நம்மை தீவிரவாதி என்றும் பயங்கரவாதி என்றும் பட்டம்  சூட்டுவார்கள். பைபிளின் படி, நற்செய்தி உலகிற்கு எடுத்துச்செல்லவேண்டும், அதனை ஏற்றுக்கொள்ளாதவர்களை நாம் ஒன்றுமே செய்யக்கூடாது. நம் வேலை நற்செய்தி அறிவிப்பது அவ்வளவு தான். அவர்கள் ஏற்கவில்லையென்றுச் சொல்லி, கத்தியை எடுத்து கழுத்தில் வைத்து, ஏற்கிறாயா? இல்லையா? என்று கட்டாயப்படுத்தினால், அதனைத் தான் "பயங்கரவாதமென்றும், தீவிரவாதமென்றும்" உலகம் அழைக்கிறது.

கடைசியாக, சுருக்கத்தை சொல்லவேண்டுமென்றால் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒவ்வொரு மதமும் இதர மதங்களை புறக்கணிக்கின்றது. மேலோட்டமாகப் பார்க்கும்போது அவைகள் ஒன்று போல  தென்படும். இதனைப் பயன்படுத்தி பல ஆன்மிகவா(ந்)திகள், மக்களை ஒன்று படுத்துகிறேன், மதநல்லிணக்கத்தை உண்டாக்குகிறேன், எல்லா மதமும் சமம் தான், ஆறுகள் அனைத்தும் கடலில் சென்று முடிவடைவது போல, எல்லா மதங்களும் இறைவனை சென்றடையும் மார்கங்கள் தான் என்று பொய்யாக சொல்லிக்கொண்டு, தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களைத் தான் மக்கள் அதிகமாக நம்புகிறார்கள். நான் தெளிவாகவும் வெளிப்படையாகவும் மதங்களின் நிலைப்பாட்டை சொல்லியுள்ளேன். எந்த மதம் சொல்வது உண்மை என்று ஆய்வு செய்ய வேண்டியது மக்களுடைய கடமையாகும். ஒவ்வொரு வேதமும் தன்னைப்பற்றி பெருமையாகத் தான் சொல்லிக் கொள்ளும், ஆனால் அது உண்மையா இல்லையா என்பதை ஆய்வுதான் முடிவு எடுக்கும், பகவத்கீதைக்கும் குர்ஆனுக்கும் பைபிளுக்கும் மற்றும் வேறு எந்த மார்க்கத்தின் புத்தகத்துக்கும் இது பொருந்தும். அவ்வளவு ஏன், மதவாதிகள் மீது குற்றம்சாட்டிய  திரு செண்பகப்பெருமாள் அவர்களின் புத்தகத்திற்கும் பொருந்தும், அதனால் தான் அந்த புத்தகத்தை ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம்.

மதம்சாரா ஆன்மீகத்தை கைகழுவி, பைபிளை மட்டுமே விமர்சித்த செண்பகப்பெருமாள்:

வாசகர்கள் இவரின் முதலாவது பத்தியை படித்த பிறகு, இந்த புத்தகத்தில் ஒரு புதிய வகையான ஆன்மீகம் பற்றி இவர் பேசுவார் என்று எதிர்ப்பார்த்து தேடினால், புத்தகம் முடியும் வரைக்கும் 'இவரது மதம்சாரா ஆன்மீகம்' பற்றி வேறு ஒரு இடத்திலும் இவர் சொல்லவேயில்லை என்பதை அறிந்துக்கொள்வார்கள்.  பைபிளை விமர்சிக்கிறேன் என்ற நோக்கில், புத்தகம் முழுவதும் தன் அரைகுறை குற்றச்சாட்டுக்களையும், அறியாமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இவரின் முதல் புத்தகம் 'குற்றவாளிக்கூண்டில் மநு?':

நாம் அடுத்த கட்டுரையை தொடங்குவதற்கு முன்பாக, இவரது முதலாவது புத்தகம் பற்றி, தற்போதய புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள சில வரிகளை பார்க்கவேண்டும். அப்போது தான் இவரது ஆன்மீகம் எது என்பது நமக்கு புரியும்.

யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும், முதல் பக்கம்:

எஸ. செண்பகப்பெருமாள்

ஓய்வு பெற்ற ஆசிரியர். இறையியல் கல்லூரிகளில் பைபிள் குறித்த வகுப்புக்கள் எடுத்துள்ளார். தமிழகம் முழுவதிலும் பைபிள் குறித்தும் இந்திய ஆன்மீகம் குறித்தும் பேசி வருகிறார். ஜாதி-சமய எல்லைகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்தை பேணும் விதமாக பணியாற்றி வருகிறார். இவருடைய முதல் புத்தகம் “குற்றவாளிக்கூண்டில் மநு?” இந்நூல் இவருடைய இரண்டாவது புத்தகம் ஆகும்.

வாசகர்களுக்கு இப்போது புரிந்திருக்கும், இவர் சொன்ன அந்த "மதம் சாராத ஆன்மீகம்" என்பது எதுவென்று. இந்த புத்தகத்தை வெளியிட்ட ‘கிழக்கு பதிப்பகத்தார்கள்' கொடுத்த ஒரு அறிமுகம் தான் மேலே கொடுக்கப்பட்ட பத்தி.  இவர் போதிப்பது 'இந்திய ஆன்மீகமாம்', அப்படியானால் அது என்ன ஆன்மீகம் என்று உங்களுக்குத் தெரிகின்றதா? 

கிழக்கு பதிப்பகத்தார்களுக்கு ஒரு சவாலை இங்கு முன்வைக்கவேண்டும், அதாவது "நீங்கள் பிரிண்ட் செய்த அவரது இரண்டாவது புத்தகமாகிய இந்த புத்தகம், எந்த வகையில் ஜாதி சமயங்களை கடந்து சமூக நல்லிணக்கத்தை பேணும் என்பதை நிருபியுங்கள், உங்களுக்கு நான் ரூபாய் 10,000 (பத்தாயிரம்) பரிசு தருகிறேன்".

இறையியல் கல்லூரிகளில் அவர் பைபிள் வகுப்புக்கள் எடுத்துள்ளார் என்பதெல்லாம் சுத்தப்பொய். அவர் பைபிள் கல்லூரிகளில் சென்று, சிலரோடு தன் அரைகுறை ஆய்வுபற்றி கேள்வி கேட்டு விவாதம் புரிந்திருப்பாரே தவிர, இவருக்கு பைபிள் வகுப்புக்கள் எடுக்கும் அளவிற்கு அறிவும் இல்லை, தகுதியும் இல்லை என்பது தான் உண்மை. 

எந்த பைபிள் இறையியல் கல்லூரியில், பைபிளை அரைகுறையாக விமர்சிக்கும் இப்படிப்பட்டவர்களை அழைத்து வகுப்பு எடுக்கச் சொல்வார்கள்? இவர் என்ன உலக தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளை செய்த மிகப்பெரிய அறிஞரா? அல்லது ஐநா சபையில் அடிக்கடி சென்று சோற்பொழிவாற்றும் அறிஞரா? ஏதோ, அவர் தன்னைப் பற்றி பொய்யாய்ச் சொன்னதை, மெய்யென்று நம்பி கிழக்கு பதிப்பகத்தார் பிரிண்ட் செய்துள்ளார்கள்.

முடிவுரை:

ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றிக்கொண்டு, அதே நேரத்தில் 'நான் மதங்களுக்கு அப்பாற்பட்டவன்' என்று சொல்பவர்களை நம்பவேண்டாம். இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.

1) செண்பகப்பெருமாள் சொல்கிறார், “நான் மதம் சாராத ஆன்மீகத்தை போதிக்கிறேன்” என்று,

2) கிழக்கு பதிப்பகத்தார்கள் எழுதுகிறார்கள் "இவர் இந்திய ஆன்மீகம்" போதிக்கிறார் என்று!

3) இவரது முதலாவது புத்தகம் “மனு” என்ற நூலுக்கு வக்காளத்து வாங்கும் வகையில் எழுதப்பட்டு இருக்கிறது.

அப்படியானால், இவருடைய  பின்னணி என்னவென்று அறிவது கடினமா?[1]

இவர் தன் முகவுரையில் இரண்டாவது பத்தியில் நேரடியாக 'பவுலடியார் மீதும் பைபிள் மீதும் குற்றம் சாட்ட ஆரம்பித்துவிட்டார்', அடுத்த தொடரிலிருந்து இவரது ஆராய்ச்சியின் ஆழமும் அகலமும் உயரமும் நீளமும் என்னவென்பதை பார்ப்போம். பைபிள் மீது இவர் சாட்டும் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் மறுப்பை பார்ப்போம்.

அடிக்குறிப்புக்கள்:

[1] குற்றவாளிக்கூண்டில்-மநு – Amazon.in - இந்த புத்தகத்தில் என்ன எழுதப்பட்டு இருக்கிறது? என்பதை அறிய அமேஜான் தொடுப்பில் கொடுக்கப்பட்ட சுருக்கத்தை (Product Description) இங்கு கீழே தருகிறேன் படித்துக்கொள்ளுங்கள்.  

இந்த புத்தகத்தை வாங்கி படித்த ஒரு வாசகர் "Awesome rebuttal of the fraudulent stories built by the Christian British..." என்று பின்னூட்டமிட்டுள்ளார். அப்படியானால், இந்த புத்தகத்திற்குள் என்ன எழுதப்பட்டு இருக்கும் என்று ஓரளவிற்கு கணிக்கமுடிகின்றதா?  வாசகர்கள் வாங்கி படியுங்களேன்! வெறும் 90 ரூபாய் தான். தற்போதைய புத்தகத்துக்கு மறுப்பை கொடுத்துவிட்டு, நான் இந்த புத்தகத்துக்கு வருவேன்.

 குற்றவாளிக்கூண்டில்-மநு – Amazon.in (Product Description)

இந்திய ஆன்மிகம் ஒருபக்கம் புகழப்படும் அதே நேரம், இந்தியச் சமூகத்தில் நிலவும் சாதிப் பிரிவினைகள், தீண்டாமை ஆகியவை குறித்துக் கடுமையான விமர்சனங்கள் இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவிலும்கூட இருப்பதைக் காண முடியும்.

சாதி ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை, இந்தியச் சமூகத்தில் பெண்களின் நிலை என்று எதனை எடுத்துக்கொண்டாலும் ‘மநு’ என்ற பெயர் உடனே விவாதத்துக்கு வந்துவிடும். மநு தர்மசாஸ்திரம் என்பது இந்தியாவில் ஒரு காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த சட்டவிதிகளின் தொகுப்பாகும். இந்தியாவின் இன்றைய சமூகப் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் மநு என்பது இன்றைய அரசியல்வாதிகள் பலரின் கருத்து. இந்தியச்சமூகம், ’மநுவாதி’ சமூகம் என்று ‘இகழப்படுகிறது’.

உண்மை என்ன? மநு தர்மசாஸ்திரம் என்பதுதான் இந்தியாவின் ஒற்றைச் சட்டப் புத்தகமாக இருந்ததா? மநு தர்மசாஸ்திரம் உண்மையில் சாதிகள் பற்றி என்னதான் சொல்கிறது? மநு தர்மசாஸ்திரம் எழுதப்பட்டதன் காரணம் என்ன? சாதிகளுக்கும் வர்ணத்துக்குமான வித்தியாசங்கள் என்னென்ன? மநு குறித்து டாக்டர் அம்பேத்கர் என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார்? தீண்டாமைப் பிரச்சினைக்குக் காரணம் மநுவா? மநு தர்மசாஸ்திரம் என்பது ஒற்றை நூலா அல்லது பல்வேறு காலகட்டங்களில் பலர் புதிது புதிதாக எழுதிச் சேர்த்த ஒரு கலவை நூலா? பிராமணர்கள் என்போர் யார்? சூத்திரர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதா? வர்ணங்களிலிருந்து சாதிகள் தோன்ற யார் காரணமாக இருந்திருக்க முடியும்? பெண்களின் நிலை அக்காலத்தில் நிஜமாகவே மோசமாக இருந்ததா? மநு தர்மசாஸ்திரத்தில் இடைச்செருகல்கள் இருந்திருக்கக்கூடுமா? மநு தர்மசாஸ்திரம் ‘ஆபத்துக் காலம்’ என்ற பெயரில் குறிப்பிடும் காலகட்டம் எது? இந்தியச் சமூகத்துக்கு நிகழ்ந்த பெரும் ஆபத்து யாது? அந்தச் சமயத்தில் இந்தியச் சமூகத்தைக் காக்க என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன?

இதுபோன்ற பல ஆழமான கேள்விகளை நூலாசிரியர் செண்பகப்பெருமாள் ஆராய்கிறார். சில தெளிவான பதில்கள் கிடைக்கின்றன. நூலாசிரியர், இந்திய வேதாந்தம், மநு தர்மசாஸ்திரம், பைபிள் ஆகிய நூல்களில் ஆழ்ந்த புலமை கொண்டவர். அவை குறித்துப் பல பயிலரங்குகள், கருத்தரங்குகள் நடத்திவருபவர். ஓய்வுபெற்ற ஆசிரியர்.


"செண்பகப்பெருமாளின் பொய்களும் இயேசுவின் வெற்றியும்" - தொடர் பதில்கள்

உமரின் மறுப்புக்கள்/கட்டுரைகள்