"இயேசு தேவனாக இருக்கிறார்" என்பதற்கு இஸ்லாமியர்களின் எதிர்ப்பு

அனேக கிறிஸ்தவர்கள் தங்கள் இஸ்லாமிய நண்பர்களுடன் வைராக்கியத்துடன் இயேசுவின் தனித்தன்மை மற்றும் தெய்வீக தன்மையைப் பகிர்ந்து கொள்ளும்போது இயேசு தேவனாக இருக்கிறார் என்று சீக்கிரத்தில் உரக்கக் கூறிவிடுகிறார்கள். ஆனால் அது இஸ்லாமியர்களுக்கு மிகப் பெரிய தடையாக ஆகிவிடுகிறதை அவர்கள் உணர்வதில்லை. இஸ்லாமானது ஏக இறைவனை – ஒரே இறைவனைக் கொண்ட மதம் ஆகும். ஒரே மெய்யான இறைவனுக்கு நிகராக வேறு யாரையாவது, எதையாவது கருதுவது இஸ்லாமியரைப் பொறுத்தவரையில் அவர்களின் மதத்தை மீறுகிற ஒரு செயலாகவும், பயங்கரமான பாவச் செயலாகவும் இருக்கிறது. ஆகவேதான் ஒன்றாகிய மெய்த்தெய்வத்தைத் தவிர இயேசுவும் ஒரு தெய்வமாக இருக்கிறார் என்ற இருகடவுள் கொள்கைக்கு எதிராக குர்-ஆன் தெளிவாக பின்வருமாறு கூறுகிறது:

"நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிடடார்கள்;. ஆனால் மஸீஹ் கூறினார்; "இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்" என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. ஸூரத்துல் அல் மாயிதா (5):72

நாம் திரும்பவும் வைராக்கியமான கிறிஸ்தவரிடம் வருவோம். அவர் எப்பொழுதெல்லாம் இயேசு தேவனாக இருக்கிறார் என்று சொல்கிறாரோ, அப்பொழுது இஸ்லாமியர் தன் மனதுக்குள், " கிறிஸ்தவர் சொல்வது போல இயேசு தேவனாக இருக்கிறார் என்றால், இயேசு இறைவனை நோக்கி "பிதாவே" என்று ஜெபித்திருக்கிறார் எனில். குறைந்தது இரு கடவுள்களாவது இருக்கிறார்கள் என கிறிஸ்தவம் போதிக்கிறது" என நினைத்துக் கொள்கிறார். அதன் பின்னர் அந்த இஸ்லாமியர் மேற்கொண்டு கிறிஸ்தவ சாட்சிக்கு இடம் கொடுக்காமல் விலகிச் சென்றுவிடுகிறார். 

கிறிஸ்தவர்கள் தங்களிடமே கேட்டுக் கொள்ள வேண்டியது என்னவெனில், இஸ்லாமியர்கள் நினைப்பது போல உண்மையிலேயே இரு கடவுள்களை வணங்குகிறோமா அல்லது மாற்கு 12:29ல் இயேசுதாமே போதித்தபடி ஒரே மெய்தேவனை விசுவாசிக்கிறோமா என்பதாகும். ஒன்றுக்கு மேற்ப்பட்ட கடவுள்களை கிறிஸ்தவர்கள் வணங்குகிறார்கள் என்ற தவறான புரிதல் இஸ்லாமியருக்கு உண்டாக்காதபடி இருப்பது மிக முக்கியமானதாகும். அப்படிச் செய்வார்கள் எனில், இயேசு இரட்சகராக இந்த பூமிக்கு தேவனுடைய இரக்கத்தை வெளிப்படுத்தவும், விழுந்து போன மனுக்குலத்தை மீட்கவும் வந்தார் என்ற எளிமையான நற்செய்தியை கேட்பதில் இருந்து இஸ்லாமியரைத் தடுத்து அவர் இடறுவதற்கேதுவான கல்லாக கிறிஸ்தவர்கள் இருந்துவிடக் கூடும். ஆகவேதான் வேதாகம அறிவிப்பான "நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் " என்ற வசனம் பற்றி குழப்பம் வேண்டாம். 

வேதாகமத்தில் இயேசு தேவனாக இருக்கிறார் என்ற நேரடி வாசகம் இடம் பெறவைக்காமல் மாறாக இயேசுவின் தெய்வீகத்தன்மையைச் சுட்டிக்காட்டும் பின்வரும் குறிப்புகளை நாம் காண்கிறோம்:

தேவனுடைய வார்த்தை (வெளிப்படுத்தல்.19:13);

இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து…. (எபிரேயர் 1:3);

அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம் ( கொலோசேயர் 1:15); மற்றும்

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்து (2 கொரிந்தியர் 4:4).

இந்த குறிப்புகள் இயேசுவில் முழுமையாக வெளிப்படுத்தப்பட்ட ஒரே மெய்யான தேவனைக் குறித்து பேசுகின்றன. நாம் இப்படிப்பட்ட அணுகுமுறையில் வேதாகமத்தை பயன்படுத்தி, நம் வேத வசனப் பிரயோகங்களை பயன்படுத்துவோமாகில், நாம் ஒரே தேவனில் உள்ள நம் விசுவாசத்தை உறுதிப்படுத்த முடியும், அதேவேளையில் நம் இஸ்லாமிய நண்பரிடம் பைபிளும் குர்-ஆனும் இரண்டுமே இயேசுவை தேவனுடைய வார்த்தை என குறிப்பிடுகின்றன என்று நினைவுபடுத்துவதன் மூலம் இயேசுவின் தெய்வீகத் தன்மையில் உள்ள நம் விசுவாசத்தை மறுபடியும் உறுதிப்படுத்திக் கொள்கிறோம். இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் பெரும்பாலான முஸ்லீம்கள் தேவனுடைய வார்த்தையானது ஒருபோதும் உண்டாக்கப்பட்டிருக்க முடியாது, அது மரிக்கவும் முடியாது, அது தெய்வீகத்தன்மை வாய்ந்தது என்பதை ஏற்றுக் கொள்வார்கள். இவ்விதத்தில் நாம் இயேசுவின் தெய்வீகத்தன்மையை, ஜீவனுள்ள தேவ வார்த்தையைக் குறித்து நாம் பேச முடியும். 

இயேசுவின் தன்மையைப் பற்றி உள்ள இரகசியத்தை உங்கள் இஸ்லாமிய நண்பரிடம் கண்டிப்பாக விளக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். தெய்வீகத்திற்க்கடுத்த காரியங்களை சாதாரண மனிதர்களாகிய நம்மில் யார் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்! ஆனால் நற்செய்தியின் எளிமையை சிக்கலானதாக்கிவிடாதபடிக்கு எச்சரிக்கயாக இருங்கள். மேலும், மிகவும் சிக்கலான இறையியல் புரிதல் தேவைப்படுகிற காரியங்களைச் சொல்ல முயற்சிக்க வேண்டாம். இரட்சிப்பைப் பெறுவதற்கு இயேசுவின் தன்மையைப் பற்றிய முழு அறிவுக்கு நாம் வரவேண்டும் என்று புதிய ஏற்பாட்டில் சொல்லப்படவே இல்லை. இயேசுவின் தெய்வீகத்தைப் முழுமையாக விளக்கக் கூடிய திறமையின் அடிப்படையில் இரட்சிப்பு இல்லை, மாறாக, இயேசு தேவனால் அனுப்பப்பட்ட மனுக்குல இரட்சகர் என்றும் தேவனால் அனுப்பப்பட்ட இவர் மூலமாக மட்டுமே நமக்கு மீட்பும் பாவ மன்னிப்பும் உண்டாகிறது என்று ஏற்றுக் கொள்கிற இருதயத்தின் அடிப்படையிலேயே இரட்சிப்பு இருக்கின்றது. அதுவே நற்செய்தி ஆகும்.

ஆங்கில மூலம்: The Objection to the claim "Jesus is God"

முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள்