ரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல

['அன்புள்ள தம்பிக்கு' உமர் எழுதிய முந்தைய கடிதங்களை படிக்க இங்கு சொடுக்கவும்] 

அன்பு தம்பிக்கு,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

என்னுடைய முந்தைய கடிதத்தை நீ படித்து இருப்பாய் அதாவது, அல்லாஹ்விற்கும், பைபிளின் தேவனுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்பதை விளக்கியிருந்தேன். 

இந்த கடிதத்தில் கிறிஸ்தவர்களிடம் இஸ்லாமியர்கள் சொல்லும் இன்னொரு தவறான தகவல் பற்றி விளக்குகிறேன்.

சபை ஐக்கியம்: ஒரு கிறிஸ்தவர் சபை ஐக்கியத்தில் தொடர்ந்து பங்கு பெற்று, பைபிளை படித்து தியானித்து, பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டின் பொதுவான வேத அறிவை பெற்று இருந்தால், அவரிடம் இஸ்லாமியர்களின் வாதம் எடுபடாது. அவர்கள் சொல்லும் விவரங்களை அந்த கிறிஸ்தவன் பைபிளோடு உரசிப்பார்த்து அவர்கள் சொல்லும் விவரங்களில் எது உண்மை எது தவறு என்று அறிந்துக்கொள்வான். ஆனால், சபை ஐக்கியத்தில் ஈடுபடாமல், வேதத்தில் அதிகமாக முக்கியத்தும் காட்டாத சராசரி கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களின் வாதத்தை நம்பிவிடுகின்றனர். கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களாக மாறுவதற்கு அனேக காரணங்கள் உண்டு, அதில் சபை ஐக்கியத்தை விட்டுவிடுதலும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது.

ஏன் இஸ்லாம் கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இல்லை என்பதை இப்போது காண்போம்:

  1. அல்லாஹ் தம்மை பைபிளின் தேவனோடும், அவரது தீர்க்கதரிசிகளோடும், பைபிளின் நிகழ்ச்சிகளோடும் சம்மந்தப்படுத்திக் கொள்கிறார். இது தவறானதாகும், ஏனென்றால், நான் உனக்கு எழுதிய முந்தைய கடிதத்தில் குறிப்பிட்டதுபோல, அல்லாஹ்வும் பைபிளின் தேவனும் வெவ்வேறானவர்கள்.
  2. பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் படி, தேவன் மேசியாவை அனுப்பி தம் திட்டத்தை நிறைவேற்றியுள்ளார். அதாவது இயேசுவின் முதல் வருகை மற்றும் அவர் நிறைவேற்றிய காரியங்கள் யெகோவா தேவனின் மிகப்பெரிய வெற்றியாகும்.
  3. அதே பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் படி, மேசியாவின் இரண்டாம் வருகைக்காக உலகம் காத்துக்கொண்டு இருக்கிறது. பைபிள் தெளிவாக முழு விவரங்களையும் சொல்லும் போது, இடையில் இஸ்லாம் எங்கேயிருந்து வந்தது?
  4. குர்-ஆனில் பல பைபிள் நிகழ்ச்சிகள், தீர்க்கதரிசிகளின் பெயர்கள் குறிப்பிட்டு இருந்தால், அதனை யெகோவா தேவன் தான் அனுப்பினார் என்று எப்படி நம்பமுடியும்? பைபிளின் அடிப்படை சத்தியத்திற்கு எதிராக குர்-ஆன் பேசும் போது, எப்படி இவ்விரு வேதங்களையும் அனுப்பினவர் ஒருவராக இருக்கமுடியும்?
  5. பைபிளின் தேவன் தம்மை "பிதா" என்ற உறவு முறையில் தம்மை வெளிப்படுத்துகிறார், இதனை குர்-ஆன் நிராகரிக்கிறது. இயேசு தேவனுடைய வார்த்தையாக இருக்கிறார், தேவகுமாரனாக இருக்கிறார் என்று பைபிள் சொல்லும் போது குர்-ஆன் அதனை நிராகரிக்கிறது. இயேசுவின் பாடுகள், சிலுவையில் அறையப்படுதல், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை குர்-ஆன் நிராகரிக்கிறது. இப்படி இருக்கும் போது எப்படி கிறிஸ்தவத்தின் தொடர்ச்சியாக "இஸ்லாம்" இருக்கமுடியும்? கிறிஸ்தவத்தை நிராகரிக்கும் இஸ்லாம், கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி அல்ல.
  6. பைபிளில் காணப்படும் நிகழ்ச்சிகளை குர்-ஆன் எடுத்துக்கொண்டதோடு  மட்டுமல்லாமல், அவைகளை மாற்றியும் திருத்தியும் கூறியுள்ளது, இப்படி இருக்க பைபிளையும் குர்-ஆனையும் கொடுத்தவர் எப்படி ஒரே இறைவனாக இருக்கமுடியும்? எப்படி அந்த தேவன் கிறிஸ்தவத்திற்கு பிறகு இஸ்லாமை தொடரச்செய்வார்?
  7. பிதாவையும்,குமாரனையும் மறுதலிக்கிறவன் பொய்யன் என்றும், அந்திக்கிறிஸ்து என்றும் முதல் நூற்றாண்டிலேயே புதிய ஏற்பாடு ஆணித்தரமாக கூறுகிறது, ஆறு நூற்றாண்டுகளுக்கு பிறகு வந்த இஸ்லாம் சொல்லிவைத்தாற் போல பிதாவையும், குமாரனையும் மறுதலித்துள்ளது. புதிய ஏற்பாட்டின் பாடி  இஸ்லாம் ஒரு பொய்யான மற்றும் அந்திக் கிறிஸ்துவின் மார்க்கம் என்றுச் சொல்லவேண்டும்.
  8. முஹம்மது என்ற பெயரில் ஒரு நபி/தீர்க்கதரிசி வருவார் என்று இயேசு முன்னுரைத்தார் என்று அறியாமையில் இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். பரிசுத்த ஆவியானவர் பற்றி இயேசு கூறிய முன்னறிவிப்பை திருத்தி, முஹம்மதுவிற்கு முடிச்சு போட இஸ்லாமியர்கள் முயற்சி எடுக்கிறார்கள், இதுவும் இஸ்லாமியர்களின் தவறான தகவலாகும்.  (யோவான் 14.16-17, 14.26, 15.26 & 16.70)
  9. இயேசு முன்னுரைத்தது முஹம்மதுவை அல்ல, அவர் பரிசுத்த ஆவியானவரைத் தான் என்பதை நிருபிக்க அனேக காரணங்களை காட்டலாம், அவைகளில் சிலவற்றை நான் உனக்காக சுருக்கமாக குறிப்பிடுகிறேன். இயேசு வருவார் என்றுச் சொன்ன 'தேற்றரவாளனை' தம்முடைய சீடர்களுக்கு இயேசு வாக்குபண்ணினார். அதாவது பேதுரு, யோவான், மத்தேயூ போன்ற சீடர்கள் உயிரோடு இருக்கும் போதே 'தேற்றரவாளனை'  அனுப்புவேன் என்று இயேசு சொன்னாரே தவிர, 600 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அரேபிய மக்களுக்காக 'தேற்றரவாளனை'  அனுப்புவேன் என்று கூறவில்லை.
  10. உங்களோடு கூட அவர் (தேற்றரவாளன்) எப்போதும்  இருப்பார் என்று இயேசு கூறினார். இயேசுவின் காலத்தில் முஹம்மது வரவில்லை மற்றும் அவர் எப்போதும் மக்களோடு இருக்கப்போவதுமில்லை. 63 ஆண்டுகள் வாழ்ந்து முஹம்மது மரித்துவிட்டார். ஆகையால் இயேசு கூறியது பரிசுத்த ஆவியானவரைத்தான், முஹம்மதுவை அல்ல என்பது திண்ணம்.
  11. இயேசு சீடர்களிடம் கூறும் போது, அவர் உங்களுக்குள் வாழுகிறார், உங்களோடு இருக்கிறார் என்று கூறினார். முதல் நூற்றாண்டின் சீடர்களுக்குள் எப்படி 7ம் நூற்றாண்டில் வந்த முஹம்மது வாழமுடியும் அல்லது அவர்களோடு இருக்கமுடியும்?

எந்த வசனங்களை இஸ்லாமியர்கள் மேற்கோள் காட்டுகிறார்களோ அதே வசனங்களைக் கொண்டு இயேசு முன்னறிவித்தது பரிசுத்த ஆவியானவரைத் தான் முஹம்மதுவை அல்ல என்று தெளிவாக முடியும்.

எனவே, பரிசுத்த ஆவியானவர் பற்றிய முன்னறிவிப்பை, முஹம்மதுவிற்கு முடிச்சுப்போடுவது அறியாமையாகும். மேலும், கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி தான் இஸ்லாம் என்றுச் சொல்வதும் அடிப்படையிலிருந்தே தவறானதாகும்.

தம்பி, இதைப் பற்றி மேலும் அறிய நீ ஆவலாக இருந்தால், ஒரே ஒரு முறை புதிய ஏற்பாட்டை படித்துப்பார்,  பரிசுத்த ஆவியானவர் பற்றிய ஒரு சில வசனங்களை படித்து ஆராய்ந்துப்பார், உனக்கே உண்மை விளங்கும்.  மேலும் விளக்கம் தேவை என்று விரும்பினால், எனக்கு எழுது, நான் மறுபடியும் உனக்கு அதிக விளக்கங்களைத் தருவேன்.

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.

இப்படிக்கு உன் சகோதரன்

தமிழ் கிறிஸ்தவன். 

மூலம்

உமரின் ரமளான் மாத தொடர் கட்டுரைகள்