பாகம் 2 - உன் கர்த்தராகிய இயேசுவை பரீட்சை பாராதிருப்பாயாக, அதற்கு பதிலாக அவரை பணிந்துக்கொள்வாயாக

சாம் ஷமான்

முதல் பாகத்தில் நாம் முன்னுரையைக் கண்டோம், இந்த இரண்டாவது பாகத்தில் இயேசு பரீட்சை பார்க்கப்பட்ட விவரங்களை மத்தேயு மற்றும் லூக்காவின் நற்செய்தி நூல்களிலிருந்து காண்போம்.

கர்த்தராகிய இயேசுவை பரீட்சை பார்த்தல்

பலர் இயேசுவை பரீட்சை பார்க்க முயன்றனர், ஆனால், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இயேசுவின் தெய்வீகத்தன்மை தான் வெளிப்பட்டது. அவைகளை சுருக்கமாக இப்போது காண்போம்:

அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.  சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார். பின்பு, தமது சீஷரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள். அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். . . . அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான். (லூக்கா 10:21-25, 29)

ஒரு யூத மத தலைவர் இயேசுவை சோதிக்க விரும்பினார். இயேசுவிற்கு தேவனின் நியாயப்பிரமாணம் தெரியுமா? முக்கியமாக இரட்சிப்பு அடைவது பற்றிய போதனைகளை இயேசு அறிந்திருக்கிறாரா? என்பதை சோதிக்க அவர் நினைத்தார். இந்த சவாலுக்கு முன்பு தான், இயேசு தம்முடைய தெய்வீகத் தன்மையைப் பற்றி தம் சீடர்களுக்கு சொல்லியிருந்தார், அதாவது, தாம் ஒரு விசேஷித்த தேவகுமாரன் என்றும், பிதா அனைத்தையும் தம்மிடம் ஒப்புக்கொடுத்துள்ளார் என்றும், பிதா அனைத்தையும் அறிவது போலவே, தானும் அனைத்தையும் அறிவார் என்றும் சொல்லியிருந்தார். அப்போது தான் இந்த சவாலை அந்த யூத மத தலைவர் முன்வைத்தார். 

மேற்கண்ட விஷயங்களில் பல ஆச்சரியமான தகவல்கள் காணப்படுகின்றன. அதாவது, குமாரனுக்கு தேவனின் அனைத்து ஞானமும் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், பூமியிலும் வானத்திலும் இருக்கும் படைப்பு அனைத்தும், தன்னுடைய கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இயேசு சொல்கிறார். தமக்கு விருப்பமுள்ளவர்களுக்கு தம்முடைய ஞானத்தை இயேசு கொடுப்பதாகவும் சொல்கிறார்.

இப்போது ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்கவும். பிதா எப்படி குமாரனை ”அறிந்திருக்கிறாரோ” அதே போல, குமாரனும் பிதாவை ”அறிந்திருக்கிறார்” என்று சொன்னால், மேலும் பிதாவை மற்றவர்கள் அறியும் படி செய்ய ”குமாரனால் மட்டுமே முடியும்” என்றுச் சொன்னால், இதற்கு அர்த்தமென்ன? கிறிஸ்துவாகிய குமாரன் சர்வஞானியாகவும், மனித அறிவுக்கு எட்டாதவராகவும் இருக்கவேண்டும், அப்போது தான் பிதாவைப் போலவே குமாரனும் ”அறிந்திருக்கிறார்” என்று சொல்லமுடியும். மேலும் பிதா மட்டுமே ”குமாரனை அறிந்திருகிறார்” என்றுச் சொல்வது, குமாரனின் தெய்வீகதன்மையை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. 

தேவ வசனம் ”பிதாவாகிய தேவன் தான் சர்வவல்லமையுள்ள யேகோவா” என்று போதிக்கிறது, அவர் தான் மெய்யான இறைவன் என்றும் சொல்கிறது.

கர்த்தாவே, உமக்கு ஒப்பானவனில்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது. ஜாதிகளின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்? தேவரீருக்கே பயப்படவேண்டியது; ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை. . . .  கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள். வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். (எரேமியா 10:6-7, 10-11)

பிதாவாகிய தேவன், மக்களை முழுமையாக அறிகிறார், மேலும் ஒவ்வொருவரின் எண்ணங்களையும், செயல்களையும் அறிகிறார், மட்டுமல்ல, மக்களின் மனதில் எண்ணங்கள் தோன்றுவதற்கு முன்பே, அவைகளை அவர் அறிகிறார்.

அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறு உத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன். (ஏசாயா 65:24)

கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன். (எரேமியா 17:10)

அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். (மத்தேயு 6:8)

தேவன் கொண்டுள்ள இப்படிப்பட்ட ஞானத்தை நினைத்து, சங்கீதக்காரன் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டார்.

கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்.  என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.  முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர். இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது. உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும். இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும். உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது; இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி.. . .   என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது. (சங்கீதம் 139:1-12, 16)

தேவனின் ஞானத்திற்கு எல்லையில்லை, மேலும் எந்த ஒரு படைப்பும் அவரது ஞானத்தை முழுவதுமாக அறியமுடியாது என்று சங்கீதக்காரன் உணருகிறார்.

கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்துமுடியாது. (சங்கீதம் 145:3)

அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார். நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது. (சங்கீதம் 147:4-5)

இப்போது நாம் ஒரு முக்கியமான விஷயத்துக்கு வருவோம். பிதாவாகிய தேவன் எப்படி ஞானமுள்ளவராக அனைத்தையும் அறிவாரோ, ”அதே போல குமாரனும் அறிகிறார்” என்று இயேசு சொல்வதினால், அவரும் தேவனைப்போல சர்வ ஞானியாகவும், மற்றவர்களின் கற்பனைக்குள் அடங்காதவராகவும் இருக்கிறார் என்பதை தெரிவிக்கிறார்.

இப்போது இந்த உதாரணத்தை கவனியுங்கள்:

வேறு சிலர் அவரைச் சோதிக்கும்படி வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று அவரிடத்தில் கேட்டார்கள். அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த வீடும் விழுந்துபோம். சாத்தானும் தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? இப்படியிருக்க, பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே.  நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள். நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக் காக்கிறபோது, அவனுடையபொருள் பத்திரப்பட்டிருக்கும். அவனிலும் அதிக பலவான் வந்து, அவனை மேற்கொள்வானேயாகில், அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும் பறித்துக்கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருளைப் பங்கிடுவான். (லூக்கா 11:16-22)

இந்த மேற்கண்ட பரீட்சையில், இயேசு அம்மக்களின் உள்ளங்களில் உள்ளவைகளை அறிந்திருந்தார். இப்படி மக்களின் எண்ணங்களை அறிவது என்பது  தேவனால் மட்டுமே ஆகும்.

உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து, தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்படும்படிக்கு தேவரீர் ஒருவரே எல்லா மனுபுத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத்தக்கதாகச் செய்து, அவனவனுக்குப் பலன் அளிப்பீராக. (1 இராஜாக்கள் 8:39-40  - மேலும் பார்க்க 1 நாளாகமம் 28:9)

தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறாரே. (சங்கீதம் 44:21)

கிறிஸ்து மக்களின் எண்ணங்களை அறிந்தது மட்டுமல்ல, அவர் அந்த தீய ஆவிகளையும் துரத்தினார், மேலும் தேவனுடைய விரலினால் துரத்தினார் என்று கூறுகிறார். தேவனுடைய விரல் மூலமாக தேவனுடைய இராஜ்ஜியத்தை பூமியில் ஸ்தாபிக்க தன்னால் முடியும் என்று கூறுகிறார். இது ஒரு புறமிருக்க, இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சாத்தானை முழுவதுமாக கட்டிவிட்டு, அவன் கொள்ளையடித்த அனைத்தையும் அவனிடமிருந்து மீட்டுக் கொள்ளவும் தன்னால் முடியும் என்று இயேசு கூறுகிறார்.

இப்போது அடுத்தபடியான பரீட்சையை காண்போம்:

அவர் சதுசேயரை வாயடைத்தார் என்று பரிசேயர் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள். அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி:  போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான். இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;  இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.  பரிசேயர் கூடியிருக்கையில், இயேசு அவர்களை நோக்கி: கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி? நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே. தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை. (மத்தேயு 22:34-46 – மேலும் பார்க்க: 16:1; 19:3; 22:18)

கட்டளைகளில் பிரதான கட்டளை எது என்று கேட்ட போது, அதற்கு பதில் கொடுத்த கிறிஸ்து, தேவனை நிபந்தனையற்ற முறையில் நேசிப்பதைப் பற்றியும், அதன் பிறகு தன்னைப்போல அயலானையும் நேசிப்பதைப் பற்றியும் எடுத்துக்கூறினார். இந்த உரையாடலில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால்,  பரிசேயர்களுக்கு இயேசு கொடுத்த சவாலாகும். அதாவது, மேசியாவை எப்படி அடையாளம் கண்டுக்கொள்வது என்பது பற்றியும், அதே நேரத்தில் மேசியா என்பவர், தாவீதின் குமாரன் மட்டுமல்ல, அதைவிட மேலானவராக, அவர் இஸ்ரவேலின் தேவனாக இருக்கிறார் என்பதையும் அவர்களுக்கு விளக்கினார்.

கிறிஸ்து தாவீது நபியின் சங்கீதம் 110:1ம் வசனத்தை மேற்கோள் காட்டினார். இவ்வசனத்தின் படி, தாவீது மேசியாவை தேவனின் பக்கத்தில் சிங்காசனத்தில் உட்கார்ந்து இருப்பதைக் கண்டார். யேகோவா தேவனின் வலது பக்கத்தில் யார் உட்கார்ந்து இருக்கமுடியும்? மேசியா மட்டுமே தேவனின் வலது பக்கத்தில் தன்னுடைய பரலோக சிங்காசனத்தில் உட்கார்ந்து உலகத்தை ஆளுகின்றவராக இருக்கிறார்.

கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது. (சங்கீதம் 103:9, மேலும் பார்க்க 2:4; 11:4)

இந்த மேசியா உட்கார்ந்திருக்கும் இடத்தைத் தான் புதிய ஏற்பாடும் இயேசு உட்கார்ந்து இருப்பதாக கூறுகின்றது.  அதாவது வானத்திலும் பூமியிலும் சகல படைப்புகளையும ஆளுகின்ற மேசியா தேவனின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்.

அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மத்தேயு (28:18)

அவன் பரிசுத்த ஆவியிலே நிறைந்ததவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து: தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசு நிற்கிறதையும் கண்டு; அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.(Acts 7:55-56)

எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே. . .  . அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். (அப்போஸ்தலர் நடபடிகள் 10:36, 42 – மேலும் பார்க்க: 2:22-36)

தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன். எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக,  அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து,  எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார். (எபேசியர் 1:19-23)

விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. (எபேசியர் 5:5)

ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது. மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.  . . .  நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். (கொலோசெயர் 2:9-10, 3:1)

அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;  அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. (1 பேதுரு 3:21-22)

நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். (வெளிப்படுத்தின விசேஷம் 3:21; மேலும் பார்க்க - 1:5; 11:15; 12:1-2, 5, 10; 17:14; 19:16; 22:1, 3)

இதோ கடைசி உதாரணத்தையும் இப்போது பார்த்துவிடலாம்:

அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவன் மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள். தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்து வைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான். பேதுரு அவனை நோக்கி: அனனியாவே நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? அதை விற்குமுன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றபின்னும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான். அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று. வாலிபர் எழுந்து, அவனைச் சேலையில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய் அடக்கம்பண்ணினார்கள்.  ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள்.  பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள். பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான். உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டாள். வாலிபர் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு, அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய புருஷனண்டையிலே அடக்கம்பண்ணினார்கள். சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று. (அப்போஸ்தலர் நடபடிகள் 5:1-11)

மேலே குறிப்பிடப்பட்ட எடுத்துக்காட்டுகளில், கிறிஸ்தவர்கள் என்றுச் சொல்லிக்கொள்கின்ற இருவர் பரிசுத்த ஆவியானவரிடம் பொய் சொன்னார்கள். அவர்கள் தங்கள் நிலத்தை விற்று, ஒரு பாகத்தை மறைத்துவைத்துக் கொண்டு, இன்னொரு பாகத்தை கொண்டு வந்து கொடுத்தார்கள். இவ்விருவர் தேவனிடமும், அவரது ஆவியானவரிடமும் பொய் சொன்னார்கள். இவர்களின் இந்த செயலை தேவன் கண்டுக்கொள்ளமாட்டார், இது யாருக்கும் தெரியப்போவதில்லை என்று இவர்கள் எண்ணிவிட்டனர். 

இந்த நிகழ்ச்சிலிருந்து இரண்டு விஷயங்கள் வெளிப்படுகின்றன. முதலாவதாக, பரிசுத்த ஆவியானவர் இப்போது கர்த்தரின் ஆவியானவராக குறிப்பிடப்படுகின்றார். இந்நிகழ்ச்சியை சுற்றியுள்ள வசனங்களையும், அப்போஸ்தலர் நடபடிகள் முழுவதையும் கவனித்தால் இதனை புரிந்துக் கொள்ளமுடியும். முதன் முதலாக, கிறிஸ்தவர்கள் இப்படியாக போதிக்கப்பட்டார்கள், அதாவது பரிசுத்த ஆவியானவர் எப்படி தேவனுடையவராக இருந்தாரோ, அதே போல அவர் இயேசுவினுடையவராகவும் இருக்கிறார் என்பதாகும். எனவே, இவர் கிறிஸ்துவின் ஆவியானவராக அடையாளப்படுத்தப்பட்டார். இதை அறிய இவ்வசனங்களை பார்க்கவும்: அப் 16:6-7; ரோமர் 8:9-11, 14-17; கலாத்தியர் 4:4-7; பிலிப்பியர் 1:19; 1 பேதுரு 1:10-12.

இரண்டாவதாக, பேதுருவின் அறிக்கையை இங்கு கவனிக்கவேண்டும். அதாவது பரிசுத்த ஆவியானவரிடம் பொய் சொல்வது என்பது, தேவனிடம் பொய் சொல்வது ஆகும். ஏனென்றால், இவ்விருவருக்கும் இடையே இருக்கும் உறவுமுறை அப்படிப்பட்டது. பரிசுத்த ஆவியானவரும், திரித்துவ தேவனில் ஒரு நபராக இருக்கிறார், இதனை பைபிளும் சாட்சி பகருகிறது.  பரிசுத்த ஆவியானவரிடம் பொய் சொல்வது, தேவனிடம் பொய் சொல்வதாகும், ஏனென்றால், ஆவியானவரும் தேவனாகவும் இருக்கிறார், ஒரு ஆள்தத்துவமுடையவராக பிதாவோடு ஐக்கியமுள்ளவராகவும் இருக்கிறார்.  ஆக, கர்த்தரின் ஆவியானவரை பரீட்சைப் பார்ப்பது என்பது, கர்த்தரை பரீட்சை பார்ப்பதாகும், ஏனென்றால், கிறிஸ்துவிற்கும், ஆவியானவருக்கும் மற்றும் பிதாவுக்குமிடையே  இருக்கும் ஐக்கியம் வேறுபிரிக்கப்பட முடியாத ஒன்றாகும் என்பதை அறிய வேண்டும்.

முடிவுரையாக, சப்பிராள் அப்போஸ்தலர் பேதுருவிடம் பொய் சொல்லி பரீட்சை பார்த்தது பரிசுத்த ஆவியானவரை மட்டுமல்ல, அவள் கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவையே பரீட்சை பார்த்தாள்.  கர்த்தரை பரீட்சை பார்ப்பது பாவம் என்பதை அவள் அறிந்திருந்தும் இக்காரியத்தை செய்ய அவள் துணிவு கொண்டாள்.

இதோடு இரண்டாவது பாகம் முடிவு பெறுகிறது, மூன்றாவது பாகத்தை பிறகு பார்ப்போம்.

மூலம்: http://www.answering-islam.org/authors/shamoun/tempt_not_lord_2.html


சாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்